டிவி நடிகர் மகளுக்கு ஆபாச எஸ்.எம்.எஸ். - போலீஸில் புகார்
சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் கோலங்கள் தொடரில் நடித்து வருபவர் ரவிகாந்த் என்கிற ரவிக்குமார். இவர் அந்தக்கால நாயகி அம்பிகாவின் இரண்டாவது கணவர் ஆவார்.
தனது மகளுடன் இவர் காவல்துறை ஆணையர் அலுவலகத்திற்கு வந்து ஒரு புகார் மனுவைக் கொடுத்துள்ளார். அதில், நான் நடிகராக, தயாரிப்பாளராக இருக்கிறேன். திரையுலக நண்பர்களுடன் தொழில் தொடர்பாக ஆலோசனை செய்ய, தகவல் பரிமாற்றத்திற்காக ஆர்குட் இணையதளத்தில் என்னைப் பற்றிய விவரங்களை தொகுத்து வைத்துள்ளேன்.
அதில் நான் நடித்த படங்கள், டிவி தொடர்கள், குடும்பத்தினர் குறித்த விவரம், நண்பர்கள் உள்ளிட்டோர் குறித்த தகவல்களை வைத்துள்ளேன்.
கலைவாணன் பாண்டியன் என்பவர் உள்பட 17 பேர், இந்தப் பகுதியைப் பார்த்துள்ளனர். அதன் மூலம் எனது மகளின் செல்போன் எண் உள்ளிட்டவற்றைத் தெரிந்து கொண்டு, தினசரி அவரது இமெயிலுக்கும், செல்போனுக்கும் ஆபாச எஸ்.எம்.எஸ்களையும், ஆபாச தகவல்களையும் அனுப்பி வருகின்றனர்.
இதுகுறித்து விசாரித்து குற்றவாளியைக் கண்டுபிடிக்க வேண்டும் என்று கோரியுள்ளார் ரவிகாந்த்.