எம்ஜிஆர் வாரிசா விஜய்காந்த்: ஆனந்தராஜ் தாக்கு
மதுரை: எம்.ஜி.ஆரின் வாரிசு என்று இப்போது சில நடிகர்கள் மக்களை குழப்பப் பார்க்கிறார்கள். கட்சி ஆரம்பித்ததும் முதல்வராகி விடலாம் என்று நினைக்கிறார்கள். அவர்களது கனவு பலிக்காது என அதிமுகவைச் சேர்ந்த நடிகர் ஆனந்தராஜ் கூறினார்.
ஜெயலலிதாவின் 58வது பிறந்தநாள் விழாவையொட்டி மதுரை மாவட்டம், சமயநல்லூர் பகுதி அதிமுக சார்பில் பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது. அதில் கலந்து கொண்ட நடிகர் ஆனந்தராஜ் பேசியதாவது,
பொது வாழ்வில் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவின் திறமைகள், நடவடிக்கைகள் என்னை கவர்ந்தது. நான் அதிமுக தொண்டர்களில் ஒருவனாக இருந்து வருகிறேன்.
கடந்த அதிமுக ஆட்சியில் எத்தனையோ திட்டங்கள் மக்களுக்கு செயல்படுத்தப்பட்டன. பயன் உள்ள திட்டங்கள் அவைகள். ஆனால் தற்போது திமுக அரசு வழங்கி வரும் இலவச திட்டங்கள் அனைத்தும் மக்களுக்கு பயன் இல்லாத வகையில் அமைந்துள்ளன. மக்களை ஏமாற்றும் வகையில் திமுக அரசு தினமும் அறிவிப்புகளை செய்து வருகிறது.
எம்.ஜி.ஆரின் வாரிசு என்று இப்போது சில நடிகர்கள் மக்களை குழப்பப் பார்க்கிறார்கள். கட்சி ஆரம்பித்ததும் முதல்வராகி விடலாம் என்று நினைக்கிறார்கள். அவர்களது கனவு பலிக்காது.
வரும் நாடாளுமன்ற தேர்தலுக்குப் பின் அந்த கட்சிகள் காணாமல் போய்விடும். நாடாளுமன்ற தேர்தலிலும், அடுத்துவரும் சட்டசபை தேர்தலிலும் அதிமுக அமோக வெற்றி பெறும் என்றார் ஆனந்தராஜ்.
குண்டு கல்யாணம்...:
இதேபோல் குளச்சலில் நடைபெற்ற அதிமுக பொதுக்கூட்டத்தில் நடிகர் குண்டுக் கல்யாணம் பேசியதாவது,
தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு கெட்டுப்போய் விட்டது. கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் ரவுடிகள் அட்டகாசம் ஒழிக்கப்பட்டது. விடுதலைப் புலிகள் நடமாட்டமும் இல்லாமல் இருந்தது.
5 ஆண்டுகளில் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா நல்ல திட்டங்களை கொண்டு வந்தார். அப்போது இந்தியாவிலேயே தமிழகம் தான் தலைசிறந்த மாநிலமாக இருந்தது. ஜெயலலிதா கொண்டு வந்த நல்ல திட்டங்களை தான் கருணாநிதி செயல்படுத்தி வருகிறார்.
சேது சமுத்திரத் திட்டம் நடைமுறைக்கு வராது. அதனால்தான் ஜெயலலிதா அதை எதிர்த்தார். ராமர் பாலம் புராண கால சின்னமாகும். ராமர் பாலத்தை இடிக்காமல் மாற்றுப் பாதையில் நிறைவேற்ற ஜெயலலிதா அன்றே ஆலோசனை வழங்கினார்.
கருணாநிதி தமிழக மக்களை ஏமாற்றத்தான் மற்ற கட்சிகளுடன் கூட்டணி வைத்துள்ளார். ராமதாஸ் காலையில் ஒரு பேச்சு, மாலையில் ஒரு பேச்சு என கூட்டணிக்குள்ளேயே குழப்பிக்கொண்டு இருக்கிறார். திருமாவளவன் விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக பேசுகிறார்.
தமிழகத்தில் காவல் துறையினருக்கே பாதுகாப்பு இல்லை. காவல் நிலையத்தில் புகுந்து துப்பாக்கிகளை கொள்ளையடிக்கிறார்கள்.
புதுக்கோட்டை தேமுதிக மாநாட்டில் விஜயகாந்த், தான் கறுப்பு எம்.ஜி.ஆர் என்றார். வாரி வாரிக் கொடுத்தவர் எம்.ஜி.ஆர். அவர் பெயரை சொல்ல இவருக்கு என்ன தகுதி உள்ளது. விஜயகாந்த் தனது படத்தில் எம்.ஜி.ஆரின் கருத்துக்களை சொல்லாதது ஏன்.
தமிழகத்தில் மீண்டும் ஜெயலலிதா தலைமையில் நல்லாட்சி அமையும் என்றார் குண்டுக் கல்யாணம்.