ஈழத் தமிழர்களுக்காக அழுதால் கூட குற்றம்- ராமதாஸ்
சென்னை: ஈழத் தமிழர்களுகாக அழுதால் கூட குற்றம் என்கிறது ஊடகம் என பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.
தமிழ்நாடு அரசு பணியாளர் பேரியக்கத்தின் தொடக்க விழாவில் அவர் பேசியதாவது,
பணியாளர்கள் வைத்திருப்பது சங்கம், இயக்கம் என்று தான் இருக்கும். ஆனால் நீங்கள் பேரியக்கம் என்று வைத்துள்ளீர்கள்.
அரசு பணியாளர்கள், சங்கம்- இயக்கம் என்று ஆரம்பித்தாலும், அதை இரண்டாக்கத்தான் பார்ப்பார்கள். அதுபோல் இல்லாமல் அரசு செய்யும் தவறுகளை தட்டிக் கேட்கின்ற போராடும் சங்கமாக ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும்.
உங்களுக்கு பாமக, விடுதலைச் சிறுத்தைகளின் ஆதரவு என்றும் உண்டு. இந்த பேரியக்கம் ஜனநாயக அமைப்பாக விளங்க வேண்டும். உங்களது 31 கோரிக்கைகள் மிகவும் சாதாரணமானது தான். இதை உடனடியாக பரிசீலித்து அரசு நிறைவேற்ற வேண்டும்.
அரசு பணியாளர்கள் குறை தீர்க்க ஒரு அமைச்சர் சார்ந்த தனித்துறை வேண்டும்.
தற்போது தமிழின பகைவர்கள் கையில் ஊடகம் இருப்பதால், நமக்கு எதிராக திருப்புகிறார்கள். ஈழத்தமிழர்களுக்காக அழுதால் அதுகூட குற்றம் என்கிறது ஊடகம்.
அதற்காகத்தான் நாங்கள் நாளிதழ், தொலைக்காட்சி தொடங்கினோம். விரைவில் வார இதழ் ஒன்று தொடங்க உள்ளோம்.
எங்கும் தமிழ், எதிலும் தமிழ் என்ற நிலை மாறி, தற்போது எங்கே தமிழ் என்ற நிலையில் உள்ளது. தற்போது அளவோடு பேச நாங்கள் தள்ளப்பட்டுள்ளோம் என்றார் ராமதாஸ்.