தனி தெலுங்கானா: 16 டிஆர்எஸ் எம்எல்ஏக்கள் ராஜினாமா
ஹைதராபாத்: தனி தெலுங்கான மாநில கோரிக்கையை வலியுறுத்தி தெலுங்கான ராஷ்ட்ரீய சமிதியைச் சேர்ந்த 16 எம்எல்ஏக்கள் இன்று தங்கள் பதவிகளை ராஜினாமா செய்து கடிதங்களை ஆந்திர சட்டசபை சபாநாயகர் சுரேஷ் ரெட்டியிடம் வழங்கினர்.
நேற்று இக் கட்சியின் 4 எம்பிக்கள் பதவி விலகியது நினைவுகூறத்தக்கத்தது.
ஆந்திர மாநிலத்தை இரண்டாக பிரித்து தனி தெலுங்கானா மாநிலம் உருவாக்க வேண்டும் என்று கோரி வரும் இந்தக் கட்சிக்கு தெலுங்கானா பகுதி மக்களின் முழு ஆதரவு உள்ளது.
ஆனால், இந்தக் கோரிக்கையை மத்திய அரசு ஏற்க மறுத்து வருவதால் நேற்று இக் கட்சியின் தலைவர் சந்திரசேகர் ராவ் உள்ளிட்ட 4 எம்பிக்கள் ராஜினாமா செய்தனர்.
இன்று 16 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்துள்ளனர். அதே போல இக் கட்சியின் 13 எம்எல்சிக்களும் ராஜினாமா செய்தனர்.
தெலுங்கானா ராஷ்டீரிய சமிதிக்கு இன்னொரு எம்பியுள்ளார். ஆனால், அவர் போலி பாஸ்போர்ட் வழக்கில் சிக்கியதால் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். இதையடுத்து அவர் பகுஜன் சமாஜ் கட்சியில் சேர்ந்து விட்டார். அவர் நேற்று ராஜினாமா செய்யவில்லை.
அதே போல ஆந்திர சட்டசபையில் தெலுங்கானா ராஷ்டீரிய சமிதி சார்பில் 26 பேர் எம்.எல்.ஏக்களாக தேர்வாயினர். இவர்களில் 10 எம்.எல்.ஏக்கள் சந்திரசேகர் ராவின் முடிவுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து தனி அணியாக செயல்பட்டு வருகின்றனர். இதனால் இவர்களும் ராஜினாமா செய்யவிலலை.