போலி நகையை அடகு வைத்த வங்கி மேலாளர்
இரணியல்: இரணியல் வங்கியில் போலி தங்க நகையை அடகு வைத்து பண மோசடி செய்த வங்கி துணை மேலாளர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இரணியல் பகுதியில் இந்தியன் ஓவர்சீஸ் கிளை வங்கி செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியின் துணை மேலாளராக கடந்த ஆண்டு சந்திரசேகரன் என்பவர் பணி புரிந்து வந்தார். தற்போது இவர் கேரள மாநிலம் பத்தனம்திட்ட வங்கி கிளையில் துணை மேலாளராக உள்ளார்.
கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 1ம் தேதியன்று கண்டன்விளை பகுதியை சேர்ந்த சுரேஷ்குமார் என்பவர் இந்த வங்கியில் அடகு வைத்திருந்த நகைகளை ரூ. 2.4 லட்ம் கட்டி மீட்டார்.
அப்போது இவ்வங்கி துணை மேலாளராக இருந்தவர் சந்திரசேகரன். இந்நிலையில் வங்கியின் ஆண்டு இறுதி கணக்கெடுப்பும், வைப்பு நகைகள் ஆய்வும் நடந்தது. அதில் ரூ. 1.2 லட்சத்துக்கு போலி நகைகள் வங்கியில் இருப்பது தெரிய வந்தது.
இதுகுறித்த தீவிர விசாரணை மேற்கொண்ட வங்கி நிர்வாகம் வங்கியில் சந்திரசேகரன் பணிகாலத்தில் தான் மோசடி நடந்திருப்பது தெரியவந்தது. இதுகுறித்து தற்போதைய வங்கி மேலாளர் போலீசில் புகார் செய்தார்.
அந்த புகாரில், சுரேஷ்குமார் வங்கியில் செலுத்திய ரூ. 1.20 லட்சத்த்தை சந்திரசேகரன் எடுத்துக்கொண்டு அதற்குப் பதிலாக போலி தங்க நகைகளை வங்கியில் வைத்து மோசடி செய்துள்ளார் என கூறியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து வங்கி அதிகாரி சந்திரசேகரன் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.