பாக் சிறையில் 35 ஆண்டுகள்.. திரும்பி வந்த காஷ்மீர் சிங்
இஸ்லாமாபாத்: உளவு பார்த்ததாகக் கூறி, பாகிஸ்தான் ராணுவத்தால் பிடிக்கப்பட்டு, பாகிஸ்தான் சிறையில் 35 ஆண்டுகளாக வாடி வந்த இந்திய முன்னாள் ராணுவ வீரர் காஷ்மீர் சிங் நேற்று விடுதலை செய்யப்பட்டார். இன்று அவர் தாயகம் திரும்பினார்.இதன் மூலம் அவரது மனைவி பரம்ஜித் கவுரின் 35 ஆண்டு காலத் தவிப்புக்கு விடிவுகாலம் பிறந்து விட்டது. இத்தனை காலமாக தனது கணவரை விட்டுப் பிரிந்து, குழந்தைகளுடன் சிரமப்பட்டு வந்த அவரது வாழ்க்கையில் நிம்மதி வெளிச்சம் பிறந்துள்ளது.
இன்று வாகா எல்லை வழியாக இந்தியாவுக்குள் நுழைந்த காஷ்மீர் சிங்கை அவரது குடும்பத்தினர் மாலை அணிவித்து கண்ணீருடன் வரவேற்றனர்.
இதை பரம்ஜித்தின் குடும்பம் பெரிய அதிசய செயலாகவே கருதுகிறது. காரணம், காஷ்மீர் சிங்கின் கதை அப்படி.
1972ம் ஆண்டு உளவு பார்த்ததாக கூறி பாகிஸ்தானில் கைது செய்யப்பட்டார் காஷ்மீர் சிங். ராணுவ கோர்ட்டில் விசாரணை நடத்தப்பட்டு அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.
இதையடுத்து சிறையில் அடைக்கப்பட்டார் காஷ்மீர் சிங். அவரை யாரும் சந்திக்க அனுமதிக்கப்படவில்லை. காஷ்மீர் சிங் திடீரென மாயமானது குறித்து அவரது குடும்பத்தினர் கவலை அடைந்தனர். அவர் எங்கு இருக்கிறார் என்பதே தெரியாமல் இருந்து வந்தது.
இந்த நிலையில் கைது செய்யப்பட்ட பின்னர் ஐந்து ஆண்டுகள் கழித்து பரம்ஜித் கவுருக்கு கடிதம் எழுதினார் காஷ்மீர் சிங். அதன் பிறகுதான் அவர் சிறையில் அடைக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது.
காஷ்மீர் சிங்கை மீட்க முயற்சிகள் தொடங்கின. ஆனால் எல்லாமே தோல்வியில் முடிந்தது.
இந்த நிலையில்தான் பாகிஸ்தானில் தற்போது உள்ள இடைக்கால அரசு காஷ்மீர் சிங்கின் விடுதலைக்கு வழி வகுத்தது. இடைக்கால அரசின் மனித உரிமைத்துறை அமைச்சர் அன்சார் பர்னி சமீபத்தில் லாகூர் சிறைக்குச் சென்றார். அங்கு காஷ்மீர் சிங்கை சந்தித்துப் பேசினார். அதன் பின்னர் அவரது விடுதலைக்கு முயற்சித்தார்.
அதிபர் முஷாரப்பின் கவனத்திற்கு காஷ்மீர் சிங் விவகாரத்தைக் கொண்டு சென்ற அர்ஷத், காஷ்மீர் சிங்கின் வயதைக் கருத்தில் கொண்டு இந்த விவகாரத்தை விரைவில் முடிவுக்குக் கொண்டு வர கோரினார். முஷாரப்பும் காஷ்மீர் சிங்குக்கு பொது மன்னிப்பு வழங்கினார்.
இதையடுத்து நேற்று லாகூர் சிறையிலிருந்து காஷ்மீர் சிங் விடுதலை செய்யப்பட்டார். இன்று இந்தியா வந்துப சேர்ந்தார்.
காஷ்மீர் சிங் விடுதலை ஆனது குறித்து பரம்ஜித் கவுர் கண்ணீர் மல்க ஆனந்தத்தை வெளிப்படுத்தினார். இத்தனை காலம் நாங்கள் எப்படி வாழ்ந்தோம் என்றே தெரியவில்லை. எனது குழந்தைகளைக் காப்பாற்றுவதற்காக நான் மிகவும் சிரமப்பட்டேன். அந்த சிரமம் எல்லாம் இப்போது மறைந்து விட்டது என்றார் கவுர்.
காஷ்மீர் சிங்கின் வருகையால், அவரைச் சார்ந்த அத்தனை பேரும் மகிழ்ச்சியில் திளைத்தாலும், அவரை நினைத்து நினைத்து வருந்திய அவரது தாய்க்கு அந்தப் பாக்கியம் இல்லை. காரணம், கடந்த டிசம்பர் மாதம்தான் காஷ்மீர் சிங்கின் தாய், மகனின் நினைவோடு மரணமடைந்தார்.