திமுக கூட்டணி-நாளை முக்கிய முடிவு: ராமதாஸ்
சென்னை: நாளை சென்னையில் பாமகவின் தலைமை நிர்வாகக் குழு கூடுகிறது. அதில் முக்கிய முடிவு எடுக்கப்படும் என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.
ராஜ்யசபா எம்பி தேர்தல் விவகாரத்தில் திமுக-பாமக இடையே மோதல் தீவிரமாகியுள்ளது. தங்களை தொடர்ந்து விமர்சித்து வரும் பாமகவுக்கு எம்பி பதவியை விட்டுத் தர திமுக மறுத்து வருகிறது.
இந் நிலையில், ராமதாஸ் கூறியதாவது:
பாமகவுக்கு ராஜ்யசபாவில் ஒரு இடம் வேண்டும் என்று கட்சி சார்பில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து திங்கட்கிழமையும், செவ்வாய்க்கிழமையும் பாமக தலைவர் ஜி.கே.மணி தலைமைச் செயலகத்தில் முதல்வர் கருணாநிதியை சந்தித்து பாமகவின் கோரிக்கையை தெரிவித்தார். ஆனால் திமுக அதை ஏற்கவில்லை.
2004ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலின்போது செய்து கொண்ட ஒப்பந்தத்தின்படி அன்புமணிக்கு எம்.பி. சீட் கொடுக்கப்பட்டதாக திமுக விளக்கம் அளித்துள்ளது.
2004ம் ஆண்டு ஒப்பந்தத்தில் 2006ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் ஒப்பந்தமும் ஒரு பகுதி தான். அதன் மூலம் தான் திமுக அரசு ஆட்சிக்கு வந்தது.
எனவே 2004ம் ஆண்டு ஒப்பந்தம் முடிவுக்கு வந்து விட்டது என்ற திமுகவின் வாதம் சரியல்ல.
2010ல் பாமகவுக்கு எம்.பி.சீட் கொடுப்பது பற்றி பரிசீலிக்கலாம் என்று முதல்வர் கருணாநிதி, ஜி.கே.மணியிடம் கூறியுள்ளார். 18 பாமக எம்.எல்.ஏ.க்கள் திமுக அரசுக்கு நிபந்தனையற்ற ஆதரவு தந்து வரும் நிலையில் இப்படி சொல்கிறார்கள்.
நாளை சென்னையில் பாமகவின் தலைமை நிர்வாகக் குழு கூடுகிறது. அதில் முக்கிய முடிவு எடுக்கப்படும் என்றார் ராமதாஸ்.
திமுக கூட்டணியை விட்டு விலகும் முடிவைக் கூட பாமக எடுக்கலாம் என்று கூறப்படுவதால் நாளைய கூட்டம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.