லஞ்சம்: மாநகராட்சி பெண் ஊழியர் கைது
மதுரை: மதுரையில் லஞ்சம் வாங்கிய மாநகராட்சி ஊழியர்கள் 2 பேரை லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் கையும் களவுமாக கைது செய்தனர்.
மதுரையைச் சேர்ந்தவர் செல்வராஜ் என்கிற பிச்சை பாண்டியன். இவர் சொத்து வரி மற்றும் குடிநீர் இணைப்பை தனது பெயருக்கு மாற்றுவது தொடர்பாக மாநகராட்சியில் விண்ணப்பித்தார்.
இவற்றை செய்ய ரூ. 3,000 லஞ்சம் தர வேண்டும் என்று இளநிலை உதவியாளர் எஸ்.குபேந்திரன், ரெக்கார்ட் கிளார்க் ஏ.நாகலட்சுமி ஆகியோர், செல்வராஜிடம் கூறியுள்ளனர்.
ஆனால் அவ்வளவு பணம் தர முடியாது என்று செல்வராஜ் கூறவே ரூ. 2,500 தருமாறு வற்புறுத்தியுள்ளனர். இதையடுத்து வடக்கு மண்டல உதவி மாநகராட்சி ஆணையர் பாண்டியனை அணுகினார் செல்வராஜ். மாநகராட்சி ஊழியர்கள் லஞ்சம் கேட்பதாக அவரிடம் புகார் கொடுத்தார்.
ஆனால் பாண்டியனோ, அட்ஜெஸ்ட் செய்து செல்லுமாறு செல்வராஜை அறிவுறுத்தியுள்ளார்.
இதைத் தொடர்ந்து லஞ்ச ஒழிப்புப் போலீஸில் புகார் கொடுத்தார் செல்வராஜ். அவர்கள் இரு ஊழியர்களையும் பிடிக்க வலை விரித்தனர். டி.எஸ்.பி. குலோத்துங்க பாண்டியன் தலைமையிலான படையினர், செல்வராஜிடம் பணத்தைக் கொடுத்து அனுப்பினர்.
அவர் மாநகராட்சி ஊழியர்களிடம் பணத்தைக் கொடுத்தபோது கையும், களவுமாக இருவரையும் லஞ்ச ஒழிப்புப் போலீஸார் கைது செய்தனர்.
இந்தக் கைது சம்பவம் நடந்தபோது, மாநகராட்சி அலுவலகத்தின் 2வது மாடியில் உள்ள மாமன்றக் கூட்ட அரங்கில், மேயர் தேன்மொழி கோபிநாத், மாநகராட்சி பட்ஜெட்டைத் தாக்கல் செய்து கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் மாநகராட்சி அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
பின்னர் டி.எஸ்.பி. குலோத்துங்க பாண்டியன் செய்தியாளர்களிடம் பேசுகையில், செல்வராஜ் கொடுத்த புகாரை அலட்சியப்படுத்திய உதவி ஆணையர் பாண்டியன் மீது துறை ரீதியிலான நடவடிக்கை எடுக்குமாறு மாநகராட்சிக்கு பரிந்துரைக்கப்படும் என்று தெரிவித்தார்.