அப்பா-அம்மா சண்டையில் சிக்கி குழந்தை பலி
பட்டுக்கோட்டை: கணவனும், மனைவியும் கட்டிப் புரண்டு சண்டை போட்டு தூங்கிக் கொண்டிருந்த குழந்தை மீது விழுந்ததில், அந்தப் பச்சைக் குழந்தை பரிதாபமாக நசுங்கி இறந்தது.
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள மேல செம்பாலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் முருகன். இவரது மனைவி ராதா. இவர்களுக்கு காமராஜ் என்கிற 2 வயது குழந்தை உள்ளது.
வெளிநாட்டில் வேலை பார்த்து வந்த முருகன், சமீபத்தில் மேல செம்பாலூர் திரும்பினார். வந்தது முதலே கணவனுக்கும், மனைவிக்கும் இடையே சண்டை மூண்டுள்ளது.
இருவரும் அடிக்கடி சண்டை போட்டுக் கொள்வது வழக்கமாகி விட்டது. 2 நாட்களுக்கு முன்பு இரவும் இவர்களுக்கு இடையே சண்டை மூண்டது. அப்போது குழந்தை காமராஜ் தூங்கிக் கொண்டிருந்தான்.
வாக்குவாதமாக இருந்த சண்டை திடீரென அடிதடியாக மாறியது. கணவனும், மனைவியும் கட்டிப்புரண்டு சண்டை போட்டுள்ளனர். அப்போது நிலை தடுமாறி தூங்கிக் கொண்டிருந்த குழந்தை மீது இருவரும் விழுந்துள்ளனர்.
இதில் குழந்தை காமராஜ் சிக்கிப் படுகாயமடைந்தான். இதைப் பார்த்து அதிர்ந்த பெற்றோர் உடனடியாக காமராஜை தூக்கிக் கொண்டு மருத்துவமனைக்கு ஓடினர். அங்கு குழந்தை அனுமதிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் குழந்தை பரிதாபமாக இறந்து போனது.
இந்த கொடுமையான சம்பவம் குறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.