மப்பு ஏட்டு சஸ்பெண்ட்-மதுரை கமிஷனர் அதிரடி!
மதுரை: மதுரையில் பணியின்போது குடிபோதையில் இருந்த ஏட்டு சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
மதுரை செல்லூர் காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணியாற்றி வருபவர் ஆனந்தன். இவருக்கு குடிப்பழக்கம் உண்டு. பணி நேரங்களில் மது அருந்தி விட்டு வருவார். உயர் அதிகாரிகள் அவரை பல முறை எச்சரிக்கை செய்து அனுப்புவது வாடிக்கை.
இந்நிலையில் நேற்று முன் தினம் ஆனந்தன் மது அருந்திவிட்டு பணிக்கு வந்தார். அப்போது அந்த வழியாக ரோந்து சென்ற போக்குவரத்து துணைக் கமிஷ்னர் குலமங்கலம், ஆனந்தனை அழைத்தார். அருகே வந்தபோது ஆனந்தன் குடிபோதையில் இருந்தது தெரியவந்தது.
உடனே அவரை பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். ஆனந்தன் மது அருந்தியது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து, துணைக்கமிஷனர் பிரபாகரன் பரிந்துரையின்படி ஆனந்தனை பணி இடை நீக்கம் செய்து மதுரை கமிஷனர் நந்தபாலன் உத்திரவிட்டார்.
காவல் துறைக்கு களங்கம் விளைவிக்கும் செயலில் ஈடுபடுவோர் மீது துறை ரீதியாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கமிஷனர் நந்தபாலன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.