சென்னை உயர்நீதிமன்றத்திற்குப் புது நீதிபதி
சென்னை: சென்னை உயர்நீதிமன்ற புதிய நீதிபதியாக, முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி ரத்தினவேல் பாண்டியனின் மகனும், வழக்கறிஞருமான ஆர்.சுப்பையா நியமிக்கப்பட்டுள்ளார்.
சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் மதுரை கிளையில் மொத்த நீதிபதி பணியிடங்கள் 49 ஆகும். தற்போது 45 பேர் பணியில் உள்ளனர். இன்னும் 4 காலியிடங்கள் உள்ளன. இவற்றை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் புதிதாக ஒரு நீதிபதி நியமிக்கப்பட்டுள்ளார். மொத்தம் 3 வழக்கறிஞர்களின் பெயர்கள் காலியிடங்களுக்காக பரிந்துரைக்கப்பட்டது. அதிலிருந்து சுப்பையாவை மட்டும் குடியரசுத் தலைவர் நியமிக்க ஒப்புதல் அளித்துள்ளார்.
இதுதொடர்பான உத்தரவு ஆவணம் சென்னை உயர்நீதிமன்றத்திற்கு அனுப்பப்பட்டது. அதில் சுப்பையா கையெழுத்திட்டார். விரைவில் நியமன உத்தரவு வெளியிடப்படும். அதன் பின்னர் சுப்பையா நீதிபதியாக பதவியேற்றுக் கொள்வார்.
சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பணியாற்றி வரும் சுப்பையா, முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி ஆர்.ரத்தினவேல் பாண்டியனின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.
--












Click it and Unblock the Notifications