மலேசியா: ஆளுங்கட்சிக்கு பலத்த அடி!: 'டத்தோ' தோல்வி - மனோகரன் வெற்றி

மலேசிய நாடாளுமன்றம் மற்றும் 13 மாகாண சட்டசபைகளுக்கு நேற்று வாக்குப் பதிவு நடந்தது. இந்தத் தேர்தலில் படாவி தலைமையிலான ஆளும் பாரிசன் தேசியக் கூட்டணிக்கு தோல்வி கிடைக்கும் என பரவலாக கருத்து நிலவியது.
இந்த நிலையில் வாக்குப் பதிவு முடிந்ததும் ஓட்டுக்களை எண்ணும் பணி தொடங்கியது. இதில் பாரிசன் கூட்டணிக்கு பெரும் அடி விழுந்துள்ளது. மலேசியா சுதந்திரமடைந்தது முதல் ஆட்சியில் இருந்து வரும் பாரிசன் கூட்டணிக்கு முதன் முதலாக பெரும் தோல்வி கிடைத்துள்ளது.
எதிர்க்கட்சிக்கு 5 மாகாணங்களில் முதல் முறையாக வெற்றி கிடைத்துள்ளது. நாடாளுமன்றத்திலும் எதிர்க்கட்சிகளின் பலம் பல மடங்கு அதிகரித்துள்ளது.
இதுவரை அறுதிப் பெரும்பான்மையுடன் மட்டுமே ஜெயித்து வந்த இக்கூட்டணிக்கு இம்முறை சாதாரண பெரும்பான்மை பலம் மட்டுமே கிடைத்துள்ளது. மூன்றில் இரண்டு பங்கு மெஜாரிட்டி அரசிடம் இல்லாததால் முக்கிய அரசியல் திருத்தங்கள், சட்டங்களைக் கொண்டு வருவதற்கு இனிமேல் எதிர்க்கட்சிகளின் உதவியை நாடியாக வேண்டும்
எதிர்க்கட்சி அணியைச் சேர்ந்த சீனர்களின் ஆதரவிலான ஜனநாயக நடவடிக்கைக் கட்சி பினாங்கு மாகாணத்தைப் பிடித்துள்ளது. பன்னாட்டு நிறுவனங்கள் நிறைந்த மாகாணம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
இஸ்லாமிய கட்சியான பி.ஏ.எஸ். கெடா, பெராக் ஆகிய மாகாணங்களில் சட்டசபைகளைப் பிடித்துள்ளது. ஏற்கனவே இருந்து வந்த கெலான்டன் மாகாணத்தில் மீண்டும் வெற்றி பெற்றுள்ளது.
அன்வர் இப்ரிகாமின், மக்கள் நீதிக் கட்சிக்கு செலாங்கூர் மாகாணத்தில் வெற்றி கிடைத்துள்ளது. இந்தக் கட்சிக்கு கோலாலம்பூரில் உள்ள பெரும்பாலான எம்.பி. சீட்களிலும் வெற்றி கிடைத்துள்ளது. இந்த மூன்று கட்சிகளும் கூட்டணி சேர்ந்து தேர்தலை சந்தித்தன.
எதிர்க்கட்சிக் கூட்டணிக்கு கடந்த முறை நாடாளுமன்றத்தில் 20 சீட்களே கிடைத்திருந்தன. ஆனால் இம்முறை 80க்கும் மேற்பட்ட இடங்களை அவை பிடித்துள்ளன.
நாடாளுமன்றத்தில் யாருக்கு எத்தனை சீட்?
மொத்த இடம் - 222.
பாரிசன் தேசியக் கூட்டணி - 137
எதிர்க்கட்சிக் கூட்டணி - 82.
முடிவு தெரிய வேண்டியது - 3.
புதிய அத்தியாயம் தொடங்கியுள்ளது - இப்ராகிம்
தேர்தல் முடிவு குறித்து எதிர்க்கட்சித் தலைவரும், முன்னாள் துணைப் பிரதமருமான அன்வர் இப்ராகிம் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். மலேசியாவில் புதிய அத்தியாயம் தொடங்கியுள்ளது என்று அவர் கூறியுள்ளார்.
இத் தேர்தலில் அன்வர் போட்டியிட அரசு தடை விதித்து விட்டது. எனவே அவரால் போட்டியிட முடியவில்லை.
தேர்தல் முடிவுகள் குறித்து அன்வர் இப்ராகிம் கூறுகையில், மலேசிய மக்கள் பேசி விட்டனர். மாற்றத்தை உணர்த்தி விட்டனர். புதிய அத்தியாயம் தொடங்கியுள்ளது. சிறப்பான, பிரகாசமான எதிர்காலம் வரப் போவதை இந்த தேர்தல் முடிவுகள் உணர்த்தியுள்ளன என்றார் அவர்.
ஏற்கனவே 1969ம் ஆண்டும் பாரிசன் தேசியக் கூட்டணிக்கு பெரும் அடி விழுந்தது. அந்த முறையும் மூன்றில் இரண்டு மடங்கு வெற்றியைப் பெற அக்கூட்டணி தவறியது. அந்த தேர்தலுக்குப் பிறகு சீனர்களுக்கும், மலாய் இனத்தவர்களுக்கும் இடையே இன மோதல் ஏற்பட்டது. பினாங்கில் பெரும் கலவரம் வெடித்தது.
அதேபோன்ற நிலைமை மீண்டும் ஏற்பட்டு விடுமோ என்ற அச்சமும் மலேசியாவில் பரவியுள்ளது. அப்படி ஒரு நிலைமை ஏற்படாமல் தடுக்க பாரிசன் தேசியக் கூட்டணித் தலைவர்கள் அமைதி காக்க வேண்டும் என்று பினாங்கு முதல்வர் கோ சு கூன் கோரியுள்ளார்.
தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. வதந்திகள் பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை எச்சரித்துள்ளது. வெற்றி ஊர்வலங்களுக்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
சாமிவேலு தோல்வி - ஹிண்ட்ராப் மனோகரன் வெற்றி
இந்தத் தேர்தலில் மலேசிய இந்திய காங்கிரஸ் கட்சிக்கும் பெரும் அடி விழுந்துள்ளது. அக்கட்சியின் தலைவரும், தொழில்துறை அமைச்சருமான டத்தோ சாமிவேலு முதல் முறையாகத் தோல்வியைத் தழுவியுள்ளார்.
சுங்காய் சிபுட் தொகுதியில் கடந்த 8 முறை நடந்த தேர்தல்களில் வென்று, கிட்டத்தட்ட 30 வருடங்களாக அத்தொகுதியின் எம்.பியாக இருந்து வந்த சாமிவேலு, இம்முறை தோல்வியைத் தழுவியுள்ளார்.
அதேபோல அக்கட்சியின் துணைத் தலைவரான பழனிவேலுவும் தேர்தலில் தோல்வி அடைந்து விட்டார். அக்கட்சியின் பல்வேறு தலைவர்களுக்கும் தோல்வி கிடைத்துள்ளது.
தமிழர்களின் ஆவேச அதிருப்தியே டத்தோ சாமிவேலுவுக்குக் கிடைத்துள்ள இந்தத் தோல்விக்குக் காரணமாக கருதப்படுகிறது. தமிழர்களுக்கு எதிரான அநீதியை உறுதியாக எதிர்க்கவும், ஆளுங்கட்சியைத் தட்டிக் கேட்கவும் மலேசிய இந்திய காங்கிரஸ் தவறி விட்டதாக தமிழர்கள் கருதியதால்தான் அக்கட்சிக்கு தோல்வி கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது.
அதேசமயம், அரசுக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தியுள்ள ஹிண்ட்ராப் அமைப்புக்கு பெரும் வெற்றி கிடைத்துள்ளது. உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஹிண்ட்ராப் நிர்வாகியான வழக்கறிஞர் மனோகரன், தேர்தலில் வெற்றி பெற்றுள்ள எம்.பி ஆகியுள்ளார்.
இதன் மூலம் மலேசிய தமிழர்கள் ஹிண்ட்ராப் அமைப்புக்கு ஆதரவாக இருப்பது நிரூபணமாகியுள்ளது.
மலேசிய மக்கள் தொகையில், மூன்றில் ஒரு பங்கு பேர் இந்திய மற்றும் சீன வம்சாவளியினர் ஆவர். இந்தியர்களில் பெரும்பாலானோர் தமிழர்கள்தான். இரு இனத்தவருமே கல்வி, வேலைவாய்ப்பில் தங்களை மலாய் இனத்தவர் புறக்கணித்து வருவதாக நீண்ட காலமாகவே புழுங்கிக் கொண்டுள்ளனர்.
இந்தத் தேர்தலில் இரு இனத்தவருமே படாவி அரசுக்கு எதிராக வாக்களித்துள்ளனர். இதனால்தான் அறுதிப் பெரும்பான்மை பலத்தை படாவி கூட்டணி இழந்திருக்கிறது. இது படாவிக்குக் கிடைத்த பெரும் தோல்வியாக கருதப்படுகிறது.
பிரதமர் பதவியை உடனடியாக படாவி ராஜினாமா செய்ய வேண்டும் என எதிர்க்கட்சிகள் கோரியுள்ளன. இதற்கு மேலும் அவர் பதவியில் ஒட்டிக் கொண்டிருக்கக் கூடாது என்று அவர்கள் கோரியுள்ளனர்.
இதுகுறித்து அன்வர் கூறுகையில், மலேசிய மக்கள் மாற்றத்தை எதிர்பார்க்கின்றனர் என்பதுதான் இந்தத் தேர்தலின் மூலம் கிடைத்துள்ள பாடம். மலாய் மக்களும், தமிழர்களும், சீனர்களும் இணைந்து புதிய மலேசியாவை உருவாக்க பாடுபடுவோம். இதற்கு இடையூறாக இருந்து வரும் படாவி உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும் என்றார்.












Click it and Unblock the Notifications