விஜய்காந்த் ஆதரவை கோருமா காங்கிரஸ்?
டெல்லி: தமிழக பட்ஜெட் கூட்டத் தொடரின்போது காங்கிரஸ் உறுப்பினர்கள் நடந்து கொள்ள வேண்டிய முறை குறித்து சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் சுதர்சனம், கட்சி கொறடா பீ்ட்டர் அல்போன்ஸ் ஆகியோர் டெல்லியில் சோனியா காந்தியுடன் ஆலோசனை நடத்தினர்.
தமிழகத்தில் 2 எம்பி சீட்களை காங்கிரசுக்கு திமுக ஒதுக்கியுள்ளது. இந்தத் தேர்தல் தொடர்பாகவும் வேட்பாளர்கள் தொடர்பாகவும் பீட்டர் மற்றும் சுதர்சனத்துடன் சோனியா ஆலோசனை நடத்தினார்.
இந் நிலையில் தமிழக சட்டமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் வரும் 19ம் தேதி கூடுகிறது. இது தொடர்பாகவும் சோனியாவுடன் இருவரும் ஆலோசனை நடத்தினர்.
கடந்த கூட்டத் தொடரில் புலிகளை ஆதரிக்கும் விஷயத்தில் விடுதலைச் சிறுத்தைகள் மீது நடவடிக்கை கோரி காங்கிரஸ் வெளிநடப்பு செய்து திமுகவுக்கு அதிர்ச்சி தந்தது. இதையடுத்து திமுக-காங்கிரஸ் இடையிலான உறவில் பின்னடைவு ஏற்பட்டது.
அது போன்ற சம்பவங்கள் மீண்டும் நடந்துவிடாமல் தவிர்க்குமாறு சுதர்சனம் மற்றும் பீட்டரிடம் சோனியா கூறி அனுப்பியதாகத் தெரிகிறது.
நாளை வேட்பாளர்கள் அறிவிப்பு:
இந் நிலையில் இன்று சென்னையில் சட்டசபை காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடந்தது.
கூட்டத்துக்குப் பின் நிருபர்களிடம் பேசிய சுதர்சனம்,
தமிழக ராஜ்யசபா தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்களின் பெயர்களை சோனியா காந்தி நாளை அறிவிப்பார். வேட்பாளர்கள் சனிக்கிழமை மனு தாக்கல் செய்வார்கள்.
எங்கள் கூட்டணி பலமாக உள்ளது. எந்தவித கருத்து வேறுபாடும் இல்லை. எனவே ஜனநாயக முற்போக்கு கூட்டணி வேட்பாளர்கள் 5 பேரும் வெற்றி பெறுவது உறுதி என்றார்.
விஜயகாந்த்திடம் ஆதரவு கேட்பீர்களா என்று சுதர்சனத்திடம் கேட்டபோது, பொறுத்திருந்து பாருங்கள் என்றார்.
இந்தத் தேர்தலில் காங்கிரஸை ஆதரிக்க விஜய்காந்த் தாயராக உள்ளதாக சோனியாவுக்கு சில காங்கிரஸ் தலைவர்கள் தகவல் அனுப்பியுள்ளதாகக் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications