ஜின்னா, வசந்தி மனு தாக்கல்-வசந்தி மீது வங்கி மோசடி புகார்
சென்னை: ராஜ்யசபா தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் அமீர் அலி ஜின்னா மற்றும் வசந்தி ஸ்டான்லி ஆகிய இருவரும் இன்று மனு தாக்கல் செய்தனர்.
ராஜ்யசபா தேர்தலில் திமுக இரு இடங்களில் போட்டியிடுகிறது. அமீர் அலி ஜின்னா மற்றும் வசந்தி ஸ்டான்லி ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டனர்.
இந்த நிலையில் இன்று இருவரும் தங்களது வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்தனர். சட்டசபை செயலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் சட்டசபை செயலரும், தேர்தல் அதிகாரியுமான செல்வராஜிடம் இருவரும் வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்தனர்.
முதலில் ஜின்னா வேட்பு மனுவை வழங்கினார். பின்னர் வசந்தி ஸ்டான்லி வழங்கினார்.
அவர்களுடன் அமைச்சர்கள் ஆற்காடு வீராசாமி, வீரபாண்டி ஆறுமுகம், ஸ்டாலின், சுப தங்கவேலன், பன்னீர்செல்வம், பூங்கோதை, கீதா ஜீவன், சுவாமிநாதன், சாமி உடன் வந்தனர்.
வசந்தி மீது வங்கி மோசடி புகார்:
இதற்கிடையே வசந்தி ஸ்டான்லி மீது வங்கி மோசடி புகார்கள் எழுந்துள்ளன.
வணிக வரித்துறையில் பணியாற்றிய வசந்தியும் அவரது கணவர் ஸ்டான்லியும் போலி சொத்து ஆவணங்களை சமர்பித்து வங்கியில் பல லட்சம் ரூபாய் கடன் வாங்கி ஏமாற்றியதாக, புகைப்படங்களுடன் சிண்டிகேட் வங்கி நிர்வாகம் வெளியிட்டிருந்த எச்சரிக்கை அறிவிப்பு விளம்பரத்தால் தி.மு.க. வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
வசந்தியும், அவரது கணவர் ஸ்டான்லியும் சிண்டிகேட் வங்கியின் கோயம்பேடு கிளையில் ரூ. 25 லட்சமும், வீட்டு வசதி நிதி நிறுவனத்தில் ரூ. 12 லட்சமும் கடன் பெற்றுள்ளனர். இதில், வீட்டு வசதி நிதி நிறுவனத்தில் ஸ்டான்லி வாங்கிய கடனுக்கு, ஜாமீன்தாரராக வசந்தி கையெழுத்திட்டுள்ளார்.
முதலில் வாங்கிய கடனுக்கு நிலுவைத் தொகையாக 32 லட்சத்து 11 ஆயிரத்து 340 ரூபாயும், இரண்டாவது கடனுக்கு நிலுவைத் தொகையாக 12 லட்சத்து 24 ஆயிரத்து 279 ரூபாயும் செலுத்த வேண்டியிருப்பதாக தெரிய வந்துள்ளது.
இது தொடர்பாக, வங்கி நிர்வாகம், கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 6ம் தேதி பொது மக்களுக்கு எச்சரிக்கை அறிவிப்பை பத்திரிகைகளில் விளம்பரமாக வெளியிட்டுள்ளது. அதில், வசந்தி மற்றும் ஸ்டான்லி புகைப்படங்கள் வெளியாகி உள்ளன.
இவர்கள், தவணை தொகையை வங்கிக்கு முறையாக செலுத்தாததோடு, போலி சொத்து ஆவணங்களை கொடுத்து கடன் பெற்று ஏமாற்றியதாக வங்கி நிர்வாகம் வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது.
வங்கி நிர்வாகம் வெளியிட்ட அறிவிப்பில், போலி சொத்து ஆவணங்களை காட்டி கடன் பெற்று, வங்கியை ஏமாற்றியுள்ளதால் கடன் நிலுவைத் தொகையை வசூலிப்பதற்காக, கடன்தாரர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க நிர்வாகம் தயாராகி வருகிறது' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விவகாரம் தான், இப்போது வசந்திக்கு எதிராக திரும்பியுள்ளது.
எம்.பி. சீட் வாய்ப்பை எதிர்பார்த்து ஏமாந்த தரப்பினர் இதுதான் வாய்ப்பு என்று வசந்திக்கு எதிராக பல்வேறு புகார்களை சேகரித்துக் கட்சித் தலைமைக்கு அனுப்பி வருகின்றனர்.
இதில் பலவற்றில் உண்மையில்லை என்றாலும் வசந்தி ஸ்டான்லிக்கு எதிரான இந்த வங்கி மோசடி விவகாரம் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.
இதனால் வசந்தியை மாற்றிவிட்டு வேறு வேட்பாளரை திமுக நிறுத்தலாம் என்று கூறப்பட்டது. ஆனாலும், வசந்தியே இன்று வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.