ஜாதிக் கலவரம்: அரசியல்வாதிகள்-மத தலைவர்களுக்கு தடை
விழுப்புரம்: வன்னியர் சமூகத்தைச் சேர்ந்த கிருஸ்துவர்களுக்கும் தலித் சமூகத்தைச் சேர்ந்த கிருஸ்துவர்களுக்கும் இடையே ஜாதிக் கலவம் நடந்த ஊருக்குள் மதத் தலைவர்கள், அரசியல் தலைவர்கள் நுழைய போலீசார் தடை விதித்துள்ளனர்.
உளுந்தூர்பேட்டை அருகே உள்ள எறையூரில் மாதா கோவிலில் வழிபாடு நடத்துவது தொடர்பாக வன்னிய சமுதாயத்தைச் சேர்ந்த கிறிஸ்தவர்களுக்கும் தலித் கிறிஸ்தவர்களுக்கும் இடையே கடந்த 9ம் தேதி ஜாதிக் கலவரம் வெடித்தது.
தலித் கிறிஸ்தவர்களின் வீடுகள் சூறையாடப்பட்டதையடுத்து போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 2 பேர் பலியாயினர்.
இந்தக் கலவரத்தையடுத்து அந்த ஊரில் தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது. நூற்றுக்கணக்கான குடும்பங்கள் ஊரை விட்டு வெளியேறிவிட்டன.
அங்கு போலீசார் தொடர்ந்து முகாமிட்டுள்ளனர். இந் நிலையில் எறையூர் கிராமத்தில் அரசியல் மற்றும் மத தலைவர்கள் நுழைய போலீசார் தடை விதித்துள்ளனர்.
மேலும் உண்ணாவிரதம்- ஊர்வலம் நடத்தவும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
இந்தக் கலவரம் தொடர்பாக 20 பேர் மீது வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த ஊரில் வன்னிய சமூகத்தினர் அதிகமுள்ள பகுதியில் ரேஷன் கடை செயல்பட்டு வருகிறது. கலவரத்திற்கு பின் தாழ்த்தப்பட்ட சமூகத்தினர் அப் பகுதிக்குள் சென்று பொருட்களை வாங்க முடியாத சூழல் நிலவுகிறது.
இதையடுத்து தலித் கிறிஸ்தவர்கள் அதிகமுள்ள காலனி பகுதியில் பகுதி நேர ரேஷன் கடை திறக்கப்பட்டு பொருட்கள் வினியோகிக்கப்பட்டு வருகின்றன.












Click it and Unblock the Notifications