அமெரிக்காவுக்கு ஆள் கடத்தல்-200 நடிகர், நடிகைகளுக்கு தடை
சென்னை: நடிகை புளோராவைப் போல விசா மோசடியில் ஈடுபட்ட தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளத் திரையுலகைச் சேர்ந்த 200 நடிகர், நடிகைகள், இயக்குநர்கள் உள்ளிட்ட திரையுலகினர் நிரந்தரமாக அமெரிக்கா செல்ல அந்த நாட்டுத் தூதரகம் தடை விதித்து அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.
பணம் பெற்றுக் கொண்டு பெண் ஒருவரை அமெரிக்காவுக்கு அழைத்துச் செல்ல முயன்றதாக நடிகை புளோரா நேற்று அதிரடியாக கைது செய்யப்பட்டார்.
இதேபோல ஏகப்பட்ட நடிகர், நடிகைகள், இயக்குநர்கள் உள்ளிட்ட திரையுலகினர் பலரிடம் பணத்தைப் பெற்றுக் கொண்டு அமெரிக்காவுக்கு அனுப்பிய விவகாரம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. தென்னிந்தியத் திரையுலகைச் சேர்ந்த இப்படிப்பட்ட 200 பேர் நிரந்தரமாக அமெரிக்கா செல்ல அந்த நாட்டு அரசு அதிரடித் தடை விதித்துள்ளது.
இதுகுறித்து அமெரிக்க துணைத் தூதர் டேவிட் ஹாப்பர் கூறுகையில், இந்தியத் திரையுலகுக்கு வெளிநாடுகளில் நல்ல பெயர் உள்ளது. அமெரிக்காவிலும் அவர்கள் மதிக்கப்படுகிறார்கள்.
ஆனால் சிலர் இதை தவறாகப் பயன்படுத்திக் கொண்டு, தங்களுக்கு உள்ள புகழினைப் பயன்படுத்திக் கொண்டு, சட்டவிரோத செயல்களுக்கு தணை போயிருக்கிறார்கள். இது துரதிர்ஷ்டவசமானது என்று கூறியுள்ளார்.
இப்படி பணம் பெற்றுக் கொண்டு மோசடியாக ஆட்களை அமெரிக்காவுக்குக் கடத்திய 200 திரையுலகினரை அடையாளம் கண்டுள்ள அமெரிக்க தூதரகம் அவர்கள் அமெரிக்காவுக்கு செல்ல நிரந்தரமாக தடை விதித்துள்ளது.
மேலும் அவர்களால் அமெரிக்காவுக்கு அனுப்பி வைக்கப்பட்டவர்களும் அடையாளம் காணப்பட்டு அவர்கள் மீது அமெரிக்க நாட்டு சட்டப்படி நடவடிக்கை எடுக்கவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
தடை விதிக்கப்பட்ட 200 பேரில் நடிகர், நடிகைகள்தான் அதிகமாம். அவர்களது பெயர் விவரங்களை வெளியிட அமெரிக்க தூதரகம் மறுத்து விட்டது. அது ரகசியமாக வைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அவர்களால் இனிமேல் அமெரிக்காவுக்கு போகவே என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நடிகர், நடிகைகள் உள்ளிட்டோர் ரூ. 5 லட்சம் வரை பணம் பெற்றுக் கொண்டு, உதவியாளர், மேக்கப் மேன், மேக்கப் பெண் என்று பல்வேறு விதமான பொய்யான பெயர்களில் ஆட்களை அமெரிக்காவுக்குக் கடத்தியுள்ளனர்.
திரையுலகினரின் இந்த விசா மோசடி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications