இலங்கைக்கு ராணுவ உதவி: நிறுத்த ராமதாஸ், திருமா. கோரிக்கை
சென்னை: இலங்கைக்கு அளித்து வரும் ராணுவ உதவிகளை இந்திய அரசு நிறுத்த வேண்டும். சிங்கள ராணுவத்தின் பிடியில் சிக்கி அழிந்து வரும் தமிழ் இனத்தைக் காக்க உதவி செய்ய வேண்டும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் ஆகியோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சென்னையில் இன்று பாமக சார்பில் இலங்கைத் தமிழர் பிரச்சினை குறித்த கலந்தாய்வுக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் பாமக, விடுதலைச் சிறுத்தைகள், பல்வேறு தமிழர் அமைப்புகள் ஆகியவற்றின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். இயக்குநர் சீமானும் பங்கேற்றார்.
ஆலோசனைக் கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களை ராமதாஸ், தொல். திருமாவளவன், இயக்குநர் சீமான் ஆகியோர் கூட்டாக சந்தித்தனர்.
ராமதாஸ் பேசுகையில், தமிழ் இனிம் தனது அழிவைத் தடுக்க இலங்கையில் போரிட்டுக் கொண்டிருக்கிறது. தமிழ் இனத்தை முற்றிலும் அழித்து விட, மூர்க்கத்தனமான முயற்சிகள் அங்கு நடந்து கொண்டிருக்கின்றன.
அதை இந்திய அரசு உணர்ந்து, தமிழர்களுக்கு உதவிக் கரம் நீட்ட வேண்டும். அப்படி இல்லாவிட்டாலும் கூட தமிழ் இனம் அழிந்து போக துணையாக இருந்து விடக் கூடாது.
இலங்கைப் பிரச்சினைக்கு உறுதியான தீர்வு காண இந்திய அரசு முனைப்புடன் செயல்பட வேண்டும். இலங்கைக்கு அளித்து வரும் ராணுவ உதவிகளை முற்றிலும் நிறுத்த வேண்டும் என்றார்.
திருமாவளவன் கூறுகையில், ஈழத் தமிழர் பிரச்சினையில் தமிழர்கள் ஒற்றுமையுடன் ஒரே குரலில் போராட வேண்டும். இலங்கைத் தமிழர்களை மட்டுமல்லாமல் இந்தியத் தமிழர்களை, அப்பாவி தமிழக மீனவர்களை அழிக்கவும் இலங்கை அரசு துடிக்கிறது. இது கடும் கண்டனத்துக்குரியது.
கச்சத்தீவை மீட்பதே தமிழக மீனவர்களின் துயரங்களுக்கு ஒரே தீர்வாக அமையும் என்றார் திருமாவளவன்.












Click it and Unblock the Notifications