எம்எல்ஏ மீது மோசடி புகார்: காங். பெண் நிர்வாகிக்கு கத்திக்குத்து!
கோவை: ஊட்டி காங்கிரஸ் எம்எல்ஏ மீது மோசடி புகார் கூறிய பெண்ணுக்கு கத்தி குத்து விழுந்தது.
நீலகிரி மாவட்ட காங்கிரஸ் கட்சித் தலைவரும் ஊட்டி தொகுதி எம்.எல்.ஏ.வாகவும் இருப்பவர் கோபாலன். கட்சியின் மாவட்டச் செயலாளராக இருப்பவர் உமா.
வேலை வாங்கித் தருவதாகக் கூறி பணம் வாங்கிக்கொண்டு ரூ.8.25 ஏமாற்றிவிட்டதாக கோபாலன் மீது உமாவும் நீலகிரியை சேர்ந்த 27 பேரும் மாவட்ட எஸ்.பி. வித்யா குல்கர்னியிடம் புகார் செய்தனர்.
அதில், கொடுத்த பணத்தைத் திருப்பிக் கேட்டதற்கு அடியாட்களை வைத்து எம்.எல்.ஏ. மிரட்டுவதால் உரிய பாதுகாப்பு தரவேண்டும் என்றும் கோரியிருந்தனர்.
இந்தக் குற்றச்சாட்டை கோபாலன் மறுத்தார். ஆனால் எஸ்.பி. உத்தரவின்பேரில் மோசடி புகார் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் உமா, ஊட்டி கமர்சியல் சாலையில் வழக்கம் போல் நேற்று அதிகாலையில் வாக்கிங் சென்றுள்ளார். அப்போது அவரை பின்தொடர்ந்த சிலர் வழிமறித்து கத்தியால் குத்தியுள்ளனர்.
இதில் உமா அதே இடத்தில் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்தார்.
அந்த வழியாக வாக்கிங் சென்ற சிலர் அவரை காப்பாற்றி ஊட்டி அரசு மருத்துவ மனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு உமாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications