தமிழகத்தில் விடுதலைப் புலிகள் ஊடுறுவல் இல்லை-டிஜிபி
சென்னை: தடை செய்யப்பட்ட விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்தவர்களின் நடமாட்டமும், செயல்பாடுகளும் தமிழகத்தில் அறவே இல்லை என்று டிஜிபி ராஜேந்திரன் கூறியுள்ளார்.
சைபர் குற்றங்களைத் தடுப்பது தொடர்பாக நாஸ்காம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கருத்தரங்கில் கலந்து கொண்ட டிஜிபி ராஜேந்திரன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், தமிழகத்தில் விடுதலைப் புலிகள் ஊடுறுவல் இல்லை. கடலோரப் பகுதிகளில் பாதுகாப்பும், கண்காணிப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது.
பலத்த பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு காரணமாகவே கேரளாவில் விடுதலைப் புலிகளுக்காக கட்டப்பட்டு வந்த படகு பிடிபட்டுள்ளது. ஆனால் தமிழகத்தில் விடுதலைப் புலிகள் நடமாட்டம் கண்டிப்பாக இல்லை.
விசா மோசடி:
விசா மோசடி வழக்கமாக நடப்பதுதான். அமெரிக்கா என்றில்லை, இங்கிலாந்து, சிங்கப்பூர் என பல்வேறு நாடுகளுக்கும் செல்வோரில் சிலர் இதுபோன்ற மோசடியில் ஈடுபடுகின்றனர். நாம் அனைவரையும் கண்காணித்துக் கொண்டிருக்க முடியாது.
மோசடி செய்பவர்கள் அதைச் செய்யத்தான் செய்வார்கள். ஆனால் சட்டம் தனது வேலையை சரியாக செய்யும். மோசடி செய்து சிக்குவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் ராஜேந்திரன்.












Click it and Unblock the Notifications