நில ஆக்கிரமிப்பு: விஜயகாந்த்துக்கு இறுதி நோட்டீஸ்!
மதுராந்தகம்: காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் அருகே ஆக்கிரமித்துள்ள அரசு புறம்போக்கு நிலத்தை உடனடியாக காலி செய்ய வேண்டும். இல்லாவிட்டால் எந்த நேரத்திலும் அது கையகப்படுத்தப்படும் என தேமுதிக தலைவர் விஜயகாந்த்துக்கு மதுராந்தகம் தாசில்தார் இறுதி நோட்டீஸ் வழங்கியுள்ளார்.
மதுராந்தகம் அருகே உள்ள தேவாத்தூர் உள்ளிட்ட சில கிராமங்களில் விஜயகாந்த்துக்குச் சொந்தமான 402 ஏக்கர் பரப்பளவிலான கேப்டன் பண்ணை என்ற பண்ணை நிலம் உள்ளது.
இந்த நிலத்தில் 26 ஏக்கர் நிலம் அரசு புறம்போக்கு நிலம் என குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து வருவாய்த்துறையினர், பொதுப்பணித்துறையினர் ஆய்வு நடத்தினர். இதில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருப்பது உண்மையே என தெரிய வந்ததாக கூறப்பட்டது.
இதையடுத்து 15 நாட்களுக்குள் ஆக்கிரமிப்பு செய்த நிலத்தை அரசிடம் திரும்ப ஒப்படைக்க வேண்டும் என தாசில்தார் நடராஜன் விஜயகாந்த்துக்கு நோட்டீஸ் அனுப்பினார். கேப்டன் பண்ணை நுழைவாயில் கேட்டிலும் இந்த நோட்டீஸ் ஒட்டப்பட்டது.
நேற்றுடன் 15 நாள் அவகாசம் முடிவடைந்தது. இந்த நிலையில் விஜயகாந்த் சார்பில் இன்று ஒரு வழக்கறிஞர் தாசில்தார் நடராஜனை சந்தித்து கூடுதல் அவகாசம் தர வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.
ஆனால் அதனை ஏற்க மறுத்த தாசில்தார் நடராஜன், இறுதி நோட்டீஸ் ஒன்றை வழக்கறிஞரிடம் கொடுத்தார். அதில், கூடுதல் கால அவகாசம் தர முடியாது. உடனடியாக இடத்தை அரசிடம் ஒப்படைக்க வேண்டும். இல்லாவிட்டால் எந்த நேரத்திலும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட இடம் கையகப்படுத்தப்படும். அதற்காகும் செலவு விஜயகாந்த்திடம் இருந்து வசூலிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இந்த நோட்டீஸை கேப்டன் பண்ணை நுழைவாயில் கேட்டிலும் அதிகாரிகள் ஒட்டி வைத்துள்ளனர்.