மதுரவாயல்,கோயம்பேடு-துறைமுகத்துக்கு 2 பறக்கும் சாலைகள்

இதற்கு ரூ. 1,468 கோடி செலவாகும்.
இது தொடர்பாக தமிழக நெடுஞ்சாலைத்துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,
சென்னை மாநகரில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக பறக்கும் சாலை' (எலிவேட்டட் ஹைவே) திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
இத் திட்டத்தின் அடிப்படையில் சென்னை துறைமுகத்துக்கு சரக்குகளை ஏற்றி வரும் கனரக வாகனங்களுக்கு தனியே பறக்கும் சாலை அமைக்கும் திட்டத்தை மத்திய அரசுடன் இணைந்து செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதன்படி, பூந்தமல்லி நெடுஞ்சாலையில் மதுரவாயலில் இருந்து சென்னை துறைமுகத்துக்கு நேரடியாக பறக்கும் சாலை அமைக்கப்படும்.
ரூ.1,468 கோடி மதிப்பிலான இத் திட்டத்தை தமிழக அரசு, மத்திய அரசு மற்றும் சென்னை துறைமுகப் பொறுப்புக் கழகம் ஆகியவை இணைந்து செயல்படுத்த முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார்.
இத்திட்டத்தின் கீழ், மதுரவாயலில் இருந்து கோயம்பேடு வரை தற்போதுள்ள பூந்தமல்லி நெடுஞ்சாலையின் மத்திய பகுதியில் தூண்கள் அமைத்து அதன்மீது பறக்கும் சாலை அமைக்கப்படும்.
இதைத் தொடர்ந்து, கோயம்பேடு பகுதியில் இருந்து சென்னை துறைமுகம் வரை கூவம் ஆற்றின் இடது கரையோரமாக இன்னொரு பறக்கும் விரைவு சாலை உருவாக்கப்படும்.
முதல்வரின் உத்தரவின்பேரில் இதற்கான ஆணை வெளியிடப்பட்டுள்ளது.
இத்திட்டத்துக்கு தேவையான அரசு நிலத்தை வழங்கவும், கூவம் கரையை இத்திட்டத்துக்கு பயன்படுத்திக் கொள்ளவும் தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
மேலும் இத்திட்டத்துக்கு தேவைப்படும் தனியார் நிலங்களை கையகப்படுத்தவும், இதனால் பாதிக்கப்படும் குடும்பங்களை மறு குடியமர்வு செய்யவும் ரூ.345 கோடி ஒதுக்கப்படும். இந்த செலவை தமிழக அரசும், சென்னை துறைமுகப் பொறுப்புக் கழகமும் சரிசமமாக ஏற்றுக் கொள்ளும்.
இந்திய நெடுஞ்சாலை ஆணையத்தின் மூலம் இத்திட்டம் செயல்படுத்தப்படும்.












Click it and Unblock the Notifications