ஓகனேக்கலில் போராட்டம்-எடியூரப்பாவுக்கு இல.கணேசன் கடும் கண்டனம்
சென்னை: தமிழகத்திற்குள் இருக்கும் ஓகனேக்கலில் கர்நாடக பாஜக தலைவர் எடியூரப்பா நுழைந்தது அத்துமீறிய செயல், அராஜக செயல், கடும் கண்டனத்துக்குரிய செயல் என்று தமிழக பாஜக தலைவர் இல.கணேசன் கடுமையாக கண்டித்துள்ளார்.
ஓகனேக்கலை தங்களுக்குச் சொந்தமானது என்று சில கன்னட அமைப்புகள் சமீப காலமாக பேசி வருகின்றன. இது தொடர்பாக கர்நாடக எல்லை வரை வந்து அவ்வப்போது போராட்டமும் நடத்தி வருகின்றன. இந்த நிலையில் இப்போது ஓட்டு வங்கி அரசியல் நுழைந்துள்ளது. அரசியல் கட்சிகள் தலையிட்டு குட்டையைக் குழப்ப ஆரம்பித்துள்ளன.
முதில் மதச்சார்பாற்ற ஜனதாளம் கட்சியினர் ஓகனேக்கல் வந்து போராட்டம் நடத்திச் சென்றனர். நேற்று பாஜகவினர் அம்மாநில முதல்வர் வேட்பாளரும், மூத்த தலைவருமான எடியூரப்பா தலைமையில் ஓகனேக்கல் வந்தனர். கர்நாடக எல்லையில் உள்ள மாறுகொட்டாய் அருகே போராட்டம் நடத்தினர்.
இந்த செயலுக்கு தமிழக பாஜக தலைவர் இல.கணேசன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், முதல்வர் பதவியை வகித்த ஒருவர் இவ்வாறு நடந்து கொண்டிருப்பது மிகவும் கண்டனத்துக்குரியது.
ஓகனேக்கல் தமிழகத்திற்குட்பட்ட பகுதி. தமிழகத்திற்குள் இருக்கும் ஒரு பகுதி. ஆனால் என்ன காரணத்தாலோ, பாஜகவினர் அறியாமையில் இருக்கின்றனர், அத்துமீறி நடந்து கொண்டுள்ளனர்.
எல்லைப் பிரச்சினையை எழுப்பினார் கர்நாடக தேர்தலில் ஜெயித்து விடலாம் என யாரோ சிலர் தவறான ஆலோசனையைச் சொல்லியிருக்க வேண்டும்.
தமிழக பாஜகவைப் பொறுத்தவரை எடியூரப்பா, ஓகனேக்கல் வந்து போராட்டம் நடத்தியது கடும் கண்டனத்துக்குரியது, தவறான செயல்.
ஓகனேக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டம் செயல்படுத்தப்பட வேண்டும் என்பதுதான் எங்களது லட்சியம். அதில் தமிழக அரசு எந்த நிலையிலும் மாறுபடக் கூடாது.
முல்லைப் பெரியாறு உள்ளிட்ட கேரளம் தொடர்பான பிரச்சினைகளில் கம்யூனிஸ்ட் கட்சிகள் அமைதியாக இருப்பது போல எங்களால் இருக்க முடியாது என்றார் இல.கணேசன்.
முல்லைப் பெரியாறு பிரச்சினையில் கேரள முதல்வரை, தமிழக கம்யூனிஸ்ட் கட்சிகள் ஒருபோதும் கடுமையாக விமர்சித்ததில்லை, கண்டித்ததில்லை. அதேபோல காங்கிரஸ் கட்சி கேரளாவில் ஆட்சியில் இருந்தபோதும் தமிழக காங்கிரஸ் கட்சியினர் கடுமையாக கண்டித்தததில்லை.
அதேசமயம், கர்நாடக பாஜகவினரின் அத்துமீறல் செயலை, தமிழக பாஜக தலைவர் இல.கணேசன் பகிரங்கமாக, கடுமையாக கண்டித்துள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications