கர்நாடகத்துக்க மத்திய அரசு துணை-வைகோ
கிருஷ்ணகிரி: ஒகேனக்கல் கூட்டுக்குடி நீர் திட்டத்தை, கர்நாடகா எதிர்ப்பதற்கு மத்திய அரசுதான் காரணம் என்று மதிமுக பொதுச் செயலர் வைகோ குற்றம் சாட்டியுள்ளார்.
காவேரிப்பட்டணத்தில் மதிமுக பிரமுகர் இல்லத் திருமணத்தில் பேசிய வைகோ,
நாட்டில் சுய மரியாதை திருமணங்கள் நடக்க காரணமானவர்கள் தந்தை பெரியாரும், பேரறிஞர் அண்ணாவும்.
மதிமுக நேர்மையான முறையில் கட்சி நடத்தி வந்தாலும், சில நேரங்களில் தந்திரமான முறையில் நடக்க வேண்டிய சூழ்நிலை உள்ளது.
முல்லை பெரியாறு அணையை உடைப்போம் என்று கேரள மாநில அமைச்சர்கள் கூறுகின்றனர். அதை தமிழக முதல்வர் கருணாநிதி கண்டுகொள்ளாமல் இருக்கிறார்.
தற்போது கேரள அரசு புதிய அணை கட்ட திட்டமிட்டுள்ளது. இதனால் தமிழகத்தின் லட்சக்கணக்கான ஏக்கர் நிலங்கள் வறண்டு போகும்.
ஒருங்கிணைந்த தர்மபுரி மாவட்ட மக்களின் குடிநீர் பிரச்னையை போக்கும் ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்துக்கு, கர்நாடகா எதிர்ப்பு தெரிவிக்கிறது. மேலும் ஓகேனக்கல் கர்நாடகத்திற்கு தான் சேரும் என கர்நாடக அரசு அறிவிக்கிறது.
நமக்கு வரவேண்டிய தண்ணீரை அவர்கள் தடுத்தபோது, நாம் பெருந்தன்மையாக இருந்தோம். ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்துக்கு கர்நாடகா எதிர்ப்பு தெரிவிப்பதற்கு மத்திய அரசே காரணம்.
மத்திய அரசு செயல்படாத காரணத்தால் தான் கர்நாடகா, கேரளா, ஆந்திரா போன்ற அரசுகள் தமிழக உரிமையை பறிக்கும் நிலைமைக்கு வந்துள்ளனர். மத்திய அரசு இதில் தலையிட்டு இந்த நதி நீர் பிரச்சனைகளுக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என எச்சரிக்கை விடுகிறேன் என்றார்.