ஜோதி மீது ஜெ. கடும் பாய்ச்சல்

இதையடுத்து அவருடன் அதிமுகவினர் யாரும் எந்தவித தொடர்பும் வைத்துக் கொள்ளக் கூடாது என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா காட்டமாக கூறியுள்ளார்.
கடந்த 12 வருடங்களாக ஜெயலலிதா, சசிகலா மற்றும் அதிமுக தொடர்பான பல முக்கிய வழக்குகளில் ஆஜராகி வந்தவர் ஜோதி. ராஜ்யசபா எம்.பியாகவும் இருந்து வந்தார். இந் நிலையில் சமீபத்தில் நடந்த ராஜ்யசபா தேர்தலில் அவருக்கு ஜெயலலிதா சீட் தரவில்லை. மாறாக பாலகங்காவை நிறுத்தினார்.
இதனால் அதிருப்தி அடைந்த ஜோதி, அதிமுகவிலிருந்து விலகி விட்டார். மேலும், அதிமுக தொடர்பான எந்த வழக்குகளிலும் இனிமேல் ஆஜராக மாட்டேன், வேறு வக்கீல் பார்த்துக் கொள்ளுங்கள் என்று ஜெயலலிதா கடிதம் அனுப்பினார்.
ஜோதியின் இந்த செயல் ஜெயலலிதாவை கடும் அதிர்ச்சியிலும், கோபத்திலும் ஆழ்த்தியுள்ளது. இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
கீழ்க் கோர்ட் முதல் சுப்ரீம் கோர்ட் வரை பல்வேறு முக்கியமான வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், எந்தவித முன்னறிவிப்பும் இன்றி வழக்குகளிலிருந்து விலகிக் கொள்வதாக ஜோதி தெரிவித்துள்ளார்.
ஜோதியின் செயல் மிகவும் கண்ணியக்குறைவானதாகும். சட்டத் தொழிலில் ஈடுபட்டிருக்கும் யாரும் இப்படி நடந்து கொண்டதாக சரித்திரமே இல்லை. சட்டத்துறைக்கே அவர் களங்கம் ஏற்படுத்தி விட்டார்.
அதிமுக தொடர்பாக 113 வழக்குகள் நாடு முழுவதும் உள்ள நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ளன. இந்த நிலையில் சொல்லாமல் கொள்ளாமல் ஜோதி விலகியிருப்பது மிகவும் கண்டனத்துக்குரிய செயலாகும்.
கடந்த மார்ச் 12ம் தேதி உச்சநீதிமன்றத்தில் ஒரு முக்கிய வழக்கில் ஆஜராகியிருந்த ஜோதி, தனக்கு ராஜ்யசபா சீட் கிடைக்கவில்லை என்று தெரிந்ததும், வழக்கிலிருந்து பாதியிலேயே விலகி வெளியேறியுள்ளார். இது சட்டத் தொழிலை கொலை செய்வதற்கு சமம். மிகவும் தரக்குறைவான செயல்.
தான் சார்ந்த கட்சிக்கு அவர் துரோகம் செய்து விட்டார். கட்சி நலனுக்கு எதிராக அவர் செயல்பட்டுள்ளார். எனவே ஜோதி கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு முதல் அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் நீக்கப்படுகிறார். அதிமுகவினர் யாரும் அவருடன் எந்தவிதத் தொடர்பையும் வைத்துக் கொள்ளக் கூடாது என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.
கடந்த 1996ம் ஆண்டு ஜோதி, அதிமுக வழக்கறிஞராக நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜெயலலிதாவுக்கு அவரது ஸ்டைலிலேயே அதிர்ச்சி தந்துள்ள ஜோதியின் இந்தச் செயல் அதிமுக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications