ராஜ்யசபா தேர்தல்: அமைதி காத்தது ஏன்-விஜய்காந்த்
கட்சி தலைமையகத்தில் அவர் பேசுகையில், மதுராந்தகத்தில் உள்ள நிலம் நான் உழைத்து சம்பாதித்தது. அதில் புறம்போக்கு நிலம் இருப்பதாக இப்போது கூறுகின்றனர்.
15 ஆண்டுகளுக்கு முன்பு, அந்த நிலத்தை வாங்கியபோதே அதிகாரிகள் இதை கூறியிருக்க வேண்டும். புறம்போக்கு நிலம் இருக்கிறதென்றால், அதை எடுத்து கொள்ளுங்கள் என்று கூறுகிறேன். அந்த நிலத்தை வைத்து நான் சம்பாதிக்க நினைத்திருந்தால் காலியாக விட்டிருக்க மாட்டேன். அடுக்கு மாடி கட்டடங்களை கட்டி விற்பனை செய்திருப்பேன்.
அரசியல்வாதிகள் வளைத்து போட்டிருக்கும் புறம்போக்கு நிலம் எவ்வளவு இருக்கிறது என்பது எனக்கும், மக்களுக்கும் தெரியும். என்னை பயமுறுத்துவதாக நினைத்து முட்டி மோதி பார்க்கின்றனர். மடியில் கனம் இருந்தால்தான் வழியில் பயம் இருக்கும் என்பதால், நான் என்றைக்கும் பின்வாங்க மாட்டேன்.
தமிழ், பண்பாடு, கலாசாரம் என்று கூறுபவர்கள் ஊழல் செய்து நாட்டை சுரண்டி சாப்பிட்டு கொண்டிருக்கின்றனர். ராஜ்யசபா தேர்தலில் நான் யாருக்காவது ஆதரவு தெரிவித்திருந்தால் அவர்களது கூட்டணியில் சேர்ந்துவிட்டதாக கூறி அரசியல் செய்திருப்பார்கள். நான் யாருக்கும் விலை போக மாட்டேன்.
திருச்சியில் நடந்த கட்சியின் மகளிர் அணிப் பேரணியில், 4 கி.மீ. தூரம் கொள்கை உணர்ச்சியோடு பெண்கள் அணிவகுத்து வந்தனர். திமுகவினரால் அதுபோன்ற மகளிர் பேரணியை நடத்த முடியுமா என்று சவால் விடுகிறேன்.
செலக்டட் ஸ்டாப் சர்வீஸ் (எஸ்எஸ்எஸ்) என்ற பெயரில் அரசு பஸ் கட்டணத்தை மறைமுகமாக உயர்த்தியுள்ளது. அரசிடம் கேட்டால் நாங்கள், புதிது புதிதாக பஸ் விடுகிறோம் என்று கூறுகின்றனர் என்றார் விஜய்காந்த்.