ஓதுவார் ஆறுமுகசாமிக்கு மாதம் ரூ. 3,000 நிதியுதவி
சிதம்பரம் நடராஜர் கோவிலில் தீட்சிதர்கள் தேவாரம், திருவாசகம் உள்ளிட்டவற்றைப் பாட போட்டு வந்த தடையை எதிர்த்து நீண்ட காலமாக போராடி வருபவர் ஆறுமுகசாமி ஓதுவார்.
இவரது தொடர் போராட்டங்களால் சமீபத்தில் விடிவு பிறந்தது. தேவாரம் உள்ளிட்ட திருமறைகளைப் பாடலாம் என தமிழக அரசு உத்தரவிட்டது. இதற்கு முதல் நாளில் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர் தீட்சிதர்கள். ஆனால் போலீஸார் கடுமையான நடவடிக்கை எடுத்ததாலும், அரசு கடுமையாக எச்சரித்ததாலும், தீட்சிதர்கள் பணிந்தனர்.
இதையடுத்து ஆறுமுகசாமி, நடராஜர் கோவிலில் பக்திப் பரவசத்துடன் தேவாரம் பாடல்களைப் பாடினார். தீட்சிதர்கள் அளித்த மரியாதையையும் நிராகரித்தார்.
இந்த நிலையில் ஆறுமுகசாமிக்கு முதல்வர் கருணாநிதி பாராட்டு தெரிவித்து, மாதந்தோறும் ரூ. 3,000 நிதியுதவி அளிக்க உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், சிதம்பரம் கோவிலில் தேவார பாடல்களைப் பாடுவதற்கு நீண்ட காலமாக முயற்சி மேற்கொண்டு வந்தவர் ஆறுமுகசாமி ஓதுவார்.
அவர் தேவார, திருவாசகப் பாடல்களை இசையோடு பாடுவதில் வல்லவராகவும், தமிழறிஞர்களில் ஒருவராகவும் திகழ்கிறார்.
முதுமையிலும் உணர்வு குன்றாது, தமிழ் மொழி பண்பாட்டு மரபுகளை பாதுகாப்பதிலும், பேணி வளர்ப்பதிலும், கொண்டுள்ள மன உறுதியைப் போற்றிப் பாராட்டும் வகையில், அவருக்கு தமிழறிஞர் நிதியுதவித் திட்டத்தின் கீழ் இந்த மாதம் 1ம் தேதி முதல் அவரது வாழ்நாள் முழுவதும் மாதந்தோறும் மூவாயிரம் ரூபாய் நிதியுதவியும், பதினைந்து ரூபாய் மருத்துவப் படியும் வழங்கிட முதல்வர் கருணாநிதி ஆணையிட்டுள்ளார் என்று கூறப்பட்டுள்ளது.