நில மதிப்பைக் குறைத்துக் காட்டி மோசடி செய்தாரா ரஜினி?
சென்னை: திருவள்ளூர் மாவட்டத்தில் நடிகர் ரஜினிகாந்த் வாங்கிய நிலத்துக்கு குறைந்த அளவில் முத்திரைத் தாள் கட்டணம் செலுத்தி மோசடி செய்யப்பட்டுள்ளதாக சர்ச்சை எழுந்துள்ளது. இதுகுறித்து விசாரணை நடந்து வருவதாக அமைச்சர் சுரேஷ்ராஜன் தெரிவித்துள்ளார்.
திருவள்ளூர் மாவட்டம் கன்னிகைப்பேர் என்ற கிராமத்தில் கடந்த ஆண்டு நடிகர் ரஜினிகாந்த் 9 ஏக்கர் நிலம் வாங்கினார். இந்த நிலத்தை ஆரணியில் உள்ள சார் பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்துள்ளனர்.
ரூ. 2.35 லட்சத்துக்கு நிலம் வாங்கப்பட்டதாக கூறி, அதற்குரிய முத்திரைத் தாள் கட்டணத்தை செலுத்தி நிலத்தை ரஜினிகாந்த் பதிவு செய்துள்ளார். ஆனால் இதில் முறைகேடு நடந்துள்ளதாக தற்போது சர்ச்சை எழுந்துள்ளது.
அந்தப் பகுதியில் ஒரு ஏக்கர் நிலம் ரூ. 25 லட்சத்திற்கு விலை போகிறதாம். ஆனால் நிலத்தின் மதிப்பை பெருமளவில் குறைத்துக் காட்டி பத்திரப் பதிவு செய்து, பெரும் மோசடி செய்யப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.
இந்த விவகாரம் குறித்து தமிழக பத்திரப் பதிவுத்துறை அமைச்சர் சுரேஷ் ராஜனிடம் கேட்டபோது அவர் கூறுகையில், ரஜினி நிலம் வாங்கியது எங்களுக்குத் தெரியாது. சார்பதிவாளர் அலுவலகங்களில் கைடு லைன் வேல்யூ அடிப்படையில்தான் பத்திரங்களைப் பதிவார்கள். அதற்குக் குறைத்து பதிய முடியாது.
ரஜினிகாந்த் நிலம் வாங்கியது தொடர்பாக எந்தப் புகாரும் வரவில்லை. இருப்பினும் பத்திரிகைகள் தொடர்ந்து செய்தி வெளியிட்டு வருவதால் இதுகுறித்து விசாரித்து அறிக்கை அனுப்புமாறு பத்திரப் பதிவுதுறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இன்னும் 2 நாளில் இந்த அறிக்கை வந்து சேரும். அதன் பின்னர் தவறு நடந்திருந்தால், தவறு செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் அமைச்சர்.
ஏற்கனவே விஜயகாந்த் நிலத்தை ஆக்கிரமித்து விட்டதாக சர்ச்சை நிலவுகிறது. இந்த நிலையில் ரஜினிகாந்த் நிலத்தின் மதிப்பைக் குறைத்துக் காட்டி பதிவு செய்து விட்டதாக சர்ச்சை எழுந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.