அணுசக்தி ஒப்பந்தம்-பிரணாப் முகர்ஜி அமெரிக்கா பயணம்
டெல்லி: அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த வெளியுறவுத் துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி அமெரிக்கா செல்கிறார்.
இடதுசாரிகளின் கடும் எதிர்ப்பையும் மீறி இந்த ஒப்பந்தத்தை நிறைவேற்றுவதில் மத்திய அரசு தீவிரமாக உள்ளது.
இந் நிலையில் அமெரிக்க வெளியுறவுத்துறை அதிகாரிகள் டெல்லிக்கு வந்து இந்திய அதிகாரிகளுடன் பல சுற்று பேச்சு நடத்தினர். இதைத் தொடர்ந்து சர்வதேச அணு சக்திக் கழகத்துடன் மத்திய அரசு ஆலோசனைகளில் ஈடுபட்டது.
இந் நிலையில் இந்த ஒப்பந்தத்தை மேலும் இழுத்தடிக்காமல் உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என மத்திய அரசுக்கு அமெரிக்கா கெடு விதித்தது. இதற்கு அனைத்துக் கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்தன.
இதைத் தொடர்ந்து அமெரிக்கா தனது நிலையை கொஞ்சம் தளர்த்தியது.
இந் நிலையில் அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் காண்டலிசா ரைசுடன் பேச்சு நடத்த அமைச்சர் பிரணாப் முகர்ஜி நாளை மறுதினம் அமெரிக்கா செல்கிறார்.
அப்போது இந்த ஒப்பந்தத்துக்கு இறுதி வடிவம் கொடுக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.