போலி பாஸ்போர்ட்: திருச்சியில் 2 பேர் கைது
திருச்சி: போலி பாஸ்போர்ட் மூலம் வெளிநாடுகளுக்கு பயணிக்க முயன்ற 2 பேர் திருச்சி விமான நிலையத்தில் பிடிபட்டனர்.
திருச்சி விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகள் பயணிகளை சோதனை செய்து கொண்டிருந்தனர். கொழும்பிலிருந்து வந்த விமானத்தில் இருந்து இறங்கிய பயணிகளை அதிகாரிகள் சோதனை செய்தனர்.
அதில் வந்த ஒரு வாலிபர் மீது அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. அதிகாரிகள் அவரை அழைத்து விசாரித்தனர். அவர், புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியைச் சேர்ந்த காதர் மொகைதீன் (29) என்றும் போலி பாஸ்போர்ட்டில் வந்ததும் தெரியவந்தது.
அதேபோல ஷார்ஜா செல்லவிருந்த விமானத்தில் பயணிகள் ஏறிக் கொண்டிருந்தனர். சுங்க அதிகாரிகள் பயணிகளை சோதனை செய்தனர். அப்போது சந்தேகத்துக்குரிய வகையில் இருந்த வாலிபரை அதிகாரிகள் விசாரித்தனர்.
அவரது ஆவணங்களை சரிபார்த்தபோது அவை போலி என்பது தெரியவந்தது. விசாரணையில் அவர் மதுரை மேலூரைச் சேர்ந்த செந்தாமரை (30) என்பது தெரிய வந்தது.
இதையடுத்து இருவரையும் போலீசார் கைது செய்தனர்.