மழை நிவாரண பணிகளுக்கு ரூ. 100 கோடி ஒதுக்கீடு
சென்னை: மழை, வெள்ள நிவாரணப் பணிகளுக்காக உடனடியாக ரூ. 100 கோடி ஒதுக்கீடு செய்யப்படுவதாக முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கன மழை தொடர்ந்து வரும் நிலையில் முதல்வர் கருணாநிதி இன்று அமைச்சர்கள், உயர் அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில் சபாநாயகர் ஆவுடையப்பனும் கலந்து கொண்டார்.
இக்கூட்டத்திற்குப் பின்னர் முதல்வர் கருணாநிதி செய்தியாளர்களிடம் பேசுகையில், மழை, வெள்ள நிவாரணப் பணிகளை மேற்கொள்வதற்காக ரூ. 100 கோடி ஒதுக்கீடு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.
போர்க்கால அடிப்படையில் நிவாரணப் பணிகளை மேற்கொள்ளுமாறு மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும், சபாநாயகரின் ஒப்புதலுடன் வருகிற 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் பேரவைக் கூட்டத்தை ஒத்திவைத்து, அன்றைய தினங்களில் அமைச்சர்களும், எம்.எல்.ஏக்களும் வெள்ள நிவாரணம் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு நேரில் சென்று நிவாரணப் பணிகளை முடுக்கி விட திட்டமிடப்பட்டுள்ளது.
பயிர் சேதம் - ஹெக்டேருக்கு ரூ. 4,000:
இதேபோல மழை வெள்ளத்தால் சேதமடைந்த பயிர்களுக்குரிய இழப்பீடாக, ஹெக்டேர் ஒன்றுக்கு ரூ. 4000 இழப்பீடு தரப்படும்.
தமிழக வெள்ள நிவாரணப் பணிகளுக்கு ரூ. 1500 கோடி தேவை என்று மத்திய அரசிடம் கேட்டுள்ளோம். விரைவில் அது வந்து சேரும் என்று நம்புகிறோம் என்றார் முதல்வர் கருணாநிதி.
2 நாட்களுக்குப் பேரவைக் கூட்டம் ஒத்திவைப்பு:
இதற்கிடையே, அமைச்சர்களும், எம்.எல்.ஏக்களும் மழை பாதித்த பகுதிகளுக்கு செல்ல வசதியாக 2 நாட்களுக்கு சபைக் கூட்டத்ைத ஒத்திவைக்க வேண்டும் என்று முதல்வர் தலைமையில் நடந்த கூட்டத்தில் விடுக்கப்பட்ட கோரிக்கை குறித்து அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தை சபாநாயகர் ஆவுடையப்பன் ஆலோசித்தார்.
அதன் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், வெள்ளம் பாதித்த பகுதிகளை அமைச்சர்கள், சட்டசபை உறுப்பினர்கள் பார்வையிட வசதியாக இரு நாட்களுக்கு பேரவைக் கூட்டத்தை ஒத்திவைக்க வேண்டும் என முதல்வர் தலைமையில் நடந்த கூட்டத்தில் கோரிக்கை விடப்பட்டது.
இதுகுறித்து அனைத்துக் கட்சித் தலைவர்களுடன் ஆலோசனை நடத்திய பின்னர் விதி எண் 26(2)ன் கீழ், 24.3.2008 மற்றும் 25.3.2008 ஆகிய இரு தினங்களுக்கு பேரவைக் கூட்டம் ஒத்திவைக்கப்படுகிறது என்றார்.