பால் விலை உயர்வு ஏன்? கருணாநிதி விளக்கம்
சென்னை: பிற மாநிலங்களோடு ஒப்பிடுகையில் தமிழகத்தில் பால் விலை குறைவுதான் என்று முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக முதல்வர் கருணாநிதி வெளியிட்டுள்ள கேள்வி - பதில் பாணி அறிக்கை:
கேள்வி: என்ன இருந்தாலும் பால் விலை அதிகம்தான் என்று உங்கள் தம்பி டி.ஆர். கூட கூறுகிறாரே?
கருணாநிதி: மற்ற மாநிலங்களோடு ஒப்பிட்டால் இங்கு பால் விலை குறைவுதான். எந்தெந்த மாநிலங்களில் என்ன விலை என்பது பற்றி அரசின் சார்பில் விரிவாக விளம்பரமாகவே வெளியிடப்பட்டுள்ளது. பால் உற்பத்தி செலவை கணக்கிட்டுத்தான் பால் விற்கும் ஏழை விவசாயிகள் விற்பனை விலையை நிர்ணயிக்கின்றனர்.
உதாரணத்துக்கு ஒரு படத்தின் மொத்த தயாரிப்பு செலவையும் கணக்கிட்டுதானே அதன் வினியோக விலையை நிர்ணயிக்கின்றனர். இல்லையெனில் படம் தயாரித்தவரின் கதி என்னாவது அப்படித்தான் பால் விலையும் பட வியாபாரத்தைப் போல.
கேள்வி: சோனியா வீட்டுக்கு ஹோலி வாழ்த்து சொல்ல பாஜ தலைவர் அத்வானி சென்றதைப் பற்றி...
கருணாநிதி: பாராட்டப்பட வேண்டிய பண்பாடு. அத்தகைய அரசியல் நாகரீகம் இந்தியா முழுவதும் குறிப்பாக தமிழகத்தில் வளர்ந்திட வேண்டும் என்பது என்னுடைய விருப்பம்.
கேள்வி: வெள்ளம், பெருமழை காரணமாக ஜெயலலிதா விடுத்த அறிக்கையில், ஏற்கனவே பெருமழை பெய்தபோது அவர் அறிக்கை விடுத்த பிறகுதான் பாதிப்பட்ட இடங்களை பார்க்க நீங்கள் சென்றதாகவும், உடனடி தேவைக்காக கடந்த முறை ரூ.200 கோடி ஒதுக்கப்பட்ட நிதியில் ரூ.56.5 கோடிதான் செலவழிக்கப்பட்டதாகவும் கூறியிருக்கிறாரே?
கருணாநிதி: கடந்த முறை அவர் அறிக்கை விட்ட பிறகுதான் பாதிப்பட்ட இடங்களை நான் பார்க்க சென்றதாக கூறுவது சுத்த பொய். ரூ.200 கோடி கடந்த முறை ரூ.200 கோடி நிதி ஒதுக்கியதில் ரூ.56.5 கோடிதான் செலவழிக்கப்பட்டதாக நிதிநிலை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது என்று கூறியிருக்கிறார்.
நுனிப்புல் மேயக்கூடாது. வேளாண் துறை மூலமாக இதுவரை பாதிக்கப்பட்ட 3,60,954 விவசாயிகளுக்கு இழப்பீட்டுத் தொகையாக வழங்கப்பட்டதுதான் ரூ.56.5 கோடி. இந்த தொகையும் சாலைப்பணிகள், ஏரி, குளங்கள் பராமரிப்பு, நிவாரண உதவித் தொகை, பாலங்கள் பழுதுபார்த்தல் போன்ற மற்ற பணிகளுக்கெல்லாம் சேர்த்து இதுவரை ரூ.143 கோடி செலவழிக்கப்பட்டு மீதம் ரூ.57 கோடி அரசின் இருப்பிலே உள்ளது. அந்தத் தொகையும் தற்போது பெய்துள்ள பெருமழையினால் ஏற்பட்ட பாதிப்புகளுக்காக பயன்படுத்தப்படும்.
கேள்வி: கல்வியின் மேம்பாட்டுக்காக நிதிநிலை அறிக்கையிலே நீங்கள் விளக்கமாக பதில் அளி்த்த பிறகும் தேமுதிக தலைவர் பள்ளிகளை சிறப்பாக நடத்த இந்த நிதிநிலை அறிக்கையில் எந்த விசேஷ திட்டமும் வகுக்கப்படவில்லை என்றும் தற்போது ஒதுக்கப்பட்டள்ள நிதியும் குறைவு என்றும் சொல்லியிருக்கிறாரே?
கருணாநிதி: நிதிநிலை அறிக்கையில் இந்த ஆண்டு கல்விக்காக மட்டும் 36 முதல் 49 வரை விரிவாக சொல்லப்பட்டுள்ளது, அவை அத்தனையும் பள்ளிகளை சிறப்பாக நடத்துவதற்கான விசேஷ திட்டங்கள்தான். ஒதுக்கப்பட்டள்ள நிதியும் குறைவு என்பது தவறான தகவல்.
2005-06ம் ஆண்டு பள்ளிக் கல்வித் துறைக்காக செய்யப்பட்ட நிதி ஒதுக்கீடு ரூ.4,110 கோடி. இந்தாண்டு 2008-09ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் பள்ளிக் கல்வித் துறைக்காக ஒதுக்கப்பட்ட நிதி ரூ.7,852 கோடி. அதாவது 91 சதவீத அளவுக்கு அதிகமாக்கப்பட்டுள்ளது.
ஆரம்ப பள்ளியில் 93.5 சதவீதம் சேரும் பிள்ளைகள் பத்தாம் வகுப்பு வரும்போது 51.65 சதவீதமாக குறைந்து விடுவதாக மாநிலத் திட்டக்குழு உறுப்பினர் சீனிவாசன் கூறியிருப்பதாக விஜயகாந்த் சொல்லியிருக்கிறார். இதுதொடர்பாக திட்டக்குழு உறுப்பினரை போனில் தொடர்பு கொண்டு பேசினேன். அந்த புள்ளி விவரம் நாடு முழுவதற்கும் உரியது, தமிழகத்துக்கு அதை ஒப்பிடக் கூடாது என்று விளக்கமளித்தார் என்று கூறியுள்ளார் கருணாநிதி.