பூடானில் இன்று முதலாவது நாடாளுமன்றத் தேர்தல்

இமயமலைத் தொடரில் உள்ள குட்டி நாடு பூடான். இங்கு இத்தனை காலமாக மன்னராட்சிதான் நடந்து வருகிறது. முன்பு மன்னராக இருந்த ஜிக்மே சிங்கே வாங்சுக் சமீபத்தில் பதவி விலகினார். இதையடுத்து அவரது 28 வயது மகன் ஜிக்மே கேஷர் நம்கியால் வாங்சுக் மன்னரானார்.
அவர் மன்னரான பின்னர் ஜனநாயகத்தை மலரச் செய்யும் நடவடிக்கைகளில் இறங்கினார். அதன் முதல் கட்டமாக அங்கு 47 இடங்களைக் கொண்ட நாடாளுமன்றத்திற்குத் தேர்தல் நடத்த முடிவு செய்யப்பட்டது. பூடானில் நடைபெறும் முதல் தேர்தல் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.
அதன்படி பூடான் நாடாளுமன்றத்திற்கு இன்று காலை வாக்குப்பதிவு தொடங்கியது. மொத்தம் 3 லட்சம் வாக்காளர்கள் ஓட்டுப் போடவுள்ளனர். காலை முதலே வாக்காளர்கள் பெரும் ஆர்வத்துடன் வரிசையில் நின்று ஓட்டுப் போட்டு வருகின்றனர். முக்கால்வாசிப் பேர் ஓட்டுப் போடுவார்கள் என தேர்தல் ஆணையர் வாங்ஜி நம்பிக்கை ெதரிவித்துள்ளார்.
தேர்தலைப் புறக்கணிக்குமாறு மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் எச்சரிக்கை விடுத்துள்ளதால் பலத்த பாதுகாப்புடன் தேர்தல் நடந்து வருகிறது.
இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் கோபாலசாமி தலைமையிலான குழு உள்பட பல்வேறு நாடுகளின் தேர்தல் அதிகாரிகள் பார்வையாளர்களாக கலந்து கொண்டுள்ளனர். மொத்தம் 40 பார்வையாளர்கள் இதில் இடம் பெற்றுள்ளனர்.
இன்று இரவே முடிவுகள் தெரிந்து விடும். இருப்பினும் நாளைதான் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்று தெரிகிறது.
இந்தத் தேர்தலில் பூடான் மன்னரின் ஆதரவு பெற்ற மக்கள் ஜனநாயகக் கட்சி மற்றும் பூடான் ஐக்கிய கட்சி ஆகிய இரு கட்சிகள் மட்டுமே போட்டியிடுகின்றன.
பூடானில் கடந்த 100 ஆண்டுகளுக்கும் மேலாக மன்னராட்சி நடந்து வருகிறது. இருப்பினும் மக்கள் எந்தவித அதிருப்தியும், பிரச்சினைகளும் இல்லாமல் மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வருகின்றனர். உலகின் மிகவும் மகிச்சியான பிரதேசங்களில் பூடானும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.
பூடானின் முக்கிய மதம் பெளத்தம். கடந்த 1999ம் ஆண்டுதான் இங்கு இன்டர்நெட்டும், டிவியும் அறிமுகமாகின.
தேர்தலை விரும்பாத மக்கள்!:
பூடானில் ஜனநாயகத்தைக் கொண்டு வர வேண்டும் என்ற மன்னரின் முடிவை பூடான் மக்களில் பலரும் விரும்பவில்லை என்பது ஆச்சரியமான விஷயம். இந்தத் தேர்தல் தேவையே இல்லாதது என்கிறார் யெஷி ஜிம்பா என்கிற வேட்பாளர்.
அவர் கூறுகையில், மன்னர் நம்மை சரியாகத்தான் வழி நடத்திச் செல்கிறார். பிறகு எதற்கு இந்த மாற்றம் என்று நான் சந்தித்த மக்கள் எல்லோருமே கேட்கிறார்கள். இருப்பினும் மன்னரின் முடிவை மதித்து இந்தத் தேர்தலை அவர்கள் வரவேற்றுள்ளனர். ஆர்வத்துடன் வாக்களிக்கின்றனர் என்கிறார் ஜிம்பா.
இந்தியா மாதிரி ஆகி விட்டால்?:
மேலும் பூடான் மக்களிடம் இன்னொரு பயமும் உள்ளது. மன்னராட்சியில் நிம்மதியாக இருக்கிறோம். இதுவே மக்களாட்சி வந்து விட்டால் அரசியல் தலைவர்கள், மக்கள் பிரதிநிதிகள் ஊழலில் ஈடுபட்டால் என்ன ஆவது என்பதுதான் அவர்களது மிகப் பெரிய கவலையாம்.
பக்கத்தில் உள்ள இந்தியா, வங்கதேசம், நேபாளம் ஆகிய நாடுகளில் நிலவும் அரசியல் குழப்பங்கள், அரசியல்வாதிகளின் ஊழல்கள், மோதல்கள் உள்ளிட்டவற்றை காரணம் காட்டி இந்தப் பயத்தை அவர்கள் வெளிப்படுத்துகின்றனர்.
தேர்தல் நடந்து புதிய ஆட்சி மலர்ந்தாலும் கூட நாட்டின் தலைவர் பொறுப்பை மன்னர் வாங்சுக் தன் வசமே வைத்துக் கொள்வார் என்று தெரிகிறது.












Click it and Unblock the Notifications