மத்திய அரசு ஊழியர் ஊதியம் 40% உயர்கிறது
டெல்லி: மத்திய அரசு ஊழியர்களின் ஊதிய உயர்வு பரிந்துரைகள் அடங்கிய 6வது சம்பள கமிஷன் அறிக்கை இன்று நிதியமைச்சர் ப.சிதம்பரத்திடம் சமர்பிக்கப்பட்டது.
கமிஷனுக்கு தலைமை தாங்கிய நீதிபதி ஸ்ரீகிருஷ்ணா இந்த அறிக்கையை சிதம்பரத்திடம் ஒப்படைத்தார்.
இனி இந்த அறிக்கையை மத்திய அரசு ஆராயும். இது தொடர்பாக பிரதமர் மன்மோகன் சிங்குடனும் சிதம்பரம் ஆலோசனை நடத்துவார்.
இந்த அறிக்கையில் எந்த அளவுக்கு ஊதிய உயர்வு பரிந்துரைக்கப்பட்டுள்ளது என்பது குறித்துப் பேச ஸ்ரீகிருஷ்ணா மறுத்துவிட்டார்.
ஆனாலும், மத்திய அரசு ஊழியர்களின் ஊதியத்தை 40 சதவீதம் வரை உயர்த்த இதில் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இதனால் அரசுக்கு ஆண்டுக்கு ரூ. 20,000 முதல் ரூ. 25 கோடி வரை கூடுதல் செலவாகும்.
இதன்மூலம் சுமார் 45 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் பலனடைவார்கள்.
இந்த கமிஷன் 2006ம் ஆண்டு அக்டோபரில் உருவாக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. ஊதிய உயர்வு தவிர, மத்திய அரசு ஊழியர்களின் கேடர்களை குறைக்கவும், பதவி உயர்வு உள்ளிட்ட விதிகளை எளிமையாக்கவும் இதில் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.