புலிகளுக்காக கடத்தவிருந்த ரசாயன பவுடர் மண்டபத்தில் பறிமுதல்
ராமேஸ்வரம்: விடுதலைப் புலிகளுக்கு கடத்துவதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரசாயன பவுடர், ஆசிட், உள்ளிட்ட பெருமளவிலான வெடிபொருட்கள் தயாரிப்பதற்குத் தேவையான மூலப் பொருட்களை மண்டபத்தில் சுங்கத் துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
மண்டபம் அருகில் உள்ள வேதாளை பகுதியில் இலங்கைக்குக் கடத்துவதற்காக பெருமளவிலான வெடிபொருள் தயாரிப்புக்கான மூலப் பொருட்கள் கடற்கரையில் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக சுங்கத் துறையினருக்குத் தகவல் வந்தது.
இதையடுத்து சுங்கத் துறையினர் அங்கு விரைந்தனர். அறுப்புக்காடு என்ற இடத்தில் கடற்கரையில் சோதனையிட்டபோது மண்ணில் பிளாஸ்டிக் கேன்கள் மற்றும் பாலிதீன் மூட்டைகள் புதைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது.
அவற்றை வெளியே எடுத்துப் பார்த்தபோது அதில், 90 பிளாஸ்டிக் கேன்களில் (தலா 5 லிட்டர் கொள்ளளவு) ரெக்ஸின் என்கிற ரசாயன திரவம், 20 கேன்களில் (தலா 20 லிட்டர் கொள்ளளவு) ஆசிட் ஆகியவை இருந்தன. இதுதவிர 500 கல் உப்பு பாக்கெட்டுகள், ரசாயனப் பவுடர் ஆகியவையும் இருந்தன.
இதில் ரெக்ஸின் என்பது, படகுகளில் ஏற்படும் ஓட்டைகளை அடைக்கப் பயன்படுத்தப்படுவது. தண்ணீர் படகுக்குள் புகாமல் இருக்கவும் இவற்றை பூசுவார்கள்.
ரசாயன பவுடர் வெடிபொருட்களைத் தயாரிப்பதற்குத் தேவையான மூலப் பொருளாக கருதப்படுகிறது. விடுதலைப் புலிகளுக்கு அனுப்ப இவற்றை பதுக்கி வைத்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இதுகுறித்து கியூ பிரிவு போலீஸாருக்குத் தகவல் தரப்பட்டு அவர்களும் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.