வேலைவாய்ப்பு அலுவலக்கத்தில் குவிந்த ஆசிரியர் பயிற்சி பட்டதாரிகள்
வேலூர்: வேலூரில் ஆசிரியர் பயிற்சியை முடித்த பட்டதாரிகள், ததங்ளது பட்டப்படிப்பை பதிவு செய்தவற்காக குவிந்ததால் அங்கு பெரும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. விடிய விடிய கொட்டிய மழையில் குடையுடன் அவர்கள் காத்திருந்தனர்.
ஆசிரியர் பயிற்சி முடித்தவர்களுக்கு பதிவு மூப்பு முன்னுரிமை அடிப்படையில் வேலை வாய்ப்பு வழங்கப்படுகிறது. இதனால் ஆசிரியர் பயிற்சி முடித்தவர்கள் சான்றிதழ் வாங்கிய கையோடு வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்வதற்காக முண்டியடுத்துக் கொண்டு செல்வது ஆண்டு தோறும் வாடிக்கையாகி விட்டது.
இந்த ஆண்டு ஆசிரியர் பயிற்சி முடித்தவர்கள் நேற்று பிற்பகல் 3 மணியளவில் தங்களது பயிற்சி பள்ளிகளில் சான்றிதழ் பெற்றனர். இன்று மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்ய தீர்மானித்து நேற்று மாலையே சான்றிதழ் வாங்கிய கையோடு வேலை வாய்ப்பு அலுவலகத்தில் குவிந்தனர்.
பதிவு மூப்பு பெறுவதற்காக அவர்கள் முண்டியடித்துக் கொண்டு இடம் பிடித்து நின்றது பரிதாபமாக இருந்தது. இரவு சுமார் 500-க்கும் மேற்பட்டோர் சாப்பிடக் கூட போகாமல் திரண்டிருந்தனர்.
இதைப்பார்த்த வேலை வாய்ப்பு அலுவலக ஊழியர்கள், நாளை (இன்று) எவ்வளவு பேர் வந்தாலும் பதிவு செய்வதற்கு உரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அதனால் வீட்டுக்கு சென்று விட்டு காலையில் வாருங்கள் என்று கூறினர்.
இதையடுத்து உள்ளூரைச் சேர்ந்தவர்களும் அருகில் உள்ள கிராமங்களில் வசிப்போரும் வீட்டுக்கு திரும்பிச் சென்றனர். ஆனால் வெளியூரைச் சேர்ந்தவர்கள் வேலை வாய்ப்பு அலுவலகம் அருகிலேயே விடிய விடிய காத்திருந்தனர்.
கோடை மழை பரவலாக பெய்து வருவதால் அவர்கள் பாதுகாப்புக்காக கையில் குடையுடன் வந்திருந்தனர். வேலை வாய்ப்பு அலுவலகத்தில் இன்று கூட்டம் அதிகமாக இருந்ததால் கூட்டத்தை கட்டுப்படுத்தவும், போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் ஒழுங்கு படுத்தவும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.