குளத்தில் மூழ்கடித்து 2 சிறுவர்கள் கொலை-சித்தப்பா கைது
திருச்சி: திருச்சி அருகே இரு சிறுவர்கள் நீரி்ல் மூழ்கடித்துக் கொலை செய்யப்பட்டனர். இது தொடர்பாக அச்சிறுவர்களின் சித்தப்பாவை போலீசார் கைது செய்துள்ளனர்.
தஞ்சை மாவட்டம் பூதலூரைச் சேர்ந்தவர் சண்முகம்-ஜெயராணி தம்பதியின் மகன்கள் நிஷாந்த் (8), சக்திமுருகன் (7).
ஜெயராணியின் தங்கை தமிழ்வாணியை திருச்சியைச் சேர்ந்த சிவராஜூக்கு (50) இரண்டாவது திருமணம் செய்து வைத்தனர். சிவராஜ் பெல் நிறுவனத்தில் வேலை செய்கிறார்.
சிவராஜின் முதல் மனைவி இறந்துவிட்டார். முதல் மனைவி் மூலம் இவருக்கு 2 குழந்தைகள் உள்ளனர். சிவராஜ் ஏற்கனவே குடும்ப கட்டுப்பாடு செய்துக் கொண்டதால் சிவராஜூக்கும் தமிழ்வாணிக்கும் குழந்தை இல்லை.
இதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி பிரச்னை ஏற்பட்டு வந்தது. இந்நிலையில் கடந்த வாரம் இருவருக்கும் ஏற்பட்ட சண்டையில் தமிழ்வாணி கோபித்துக் கொண்டு ஜெயராணியின் வீட்டுக்கு வந்துவிட்டார். பின்னர் தாய் வீட்டுக்கு சென்றுவிட்டார்.
மனைவியை தன்னோடு சேர்த்து வைக்கும்படி, சண்முகம், ஜெயராணியிடம் சிவராஜ் கேட்டார். அதற்கு குழந்தை பாக்கியம் தர முடியாதவரோடு வாழ விருப்பமில்லை என்று தமிழ்வாணி கூறியதாக இருவரும் அவரிடம் கூறினார்.
இவர்களுக்கு குழந்தை இருப்பதால்தானே இப்படி கூறுகின்றனர் என்று ஆத்திரமடைந்த சிவராஜ் கடந்த 20ம் தேதி நிஷாந்த், வேல்முருகனை அழைத்துச் சென்றார்.
குழந்தைகளை காணாமால் தவித்த சண்முகம், ஜெயராணி பூதலூர் போலீசில் புகார் செய்தனர்.
இந்நிலையில் திருவெறும்பூர் நடராஜபுரம் அருகே உள்ள குளத்தில் 2 குழந்தைகளின் சடலங்களும் மிதந்துக் கொண்டிருந்தன.
இதையடுத்து சிவராஜை போலீசார் கைது செய்துள்ளனர். இந்தக் கொலைகளை அவர் ஒப்புக் கொண்டுள்ளார்.