இந்தியர்களுக்குப் புதிய பணி ஒப்பந்தம்-மலேசிய அமைச்சர்
கோலாலம்பூரில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், மலேசியாவில் பணியாற்றும் இந்தியத் தொழிலாளர்களின் பணி நிலை குறித்து இந்தியா கவலை தெரிவித்துள்ளது. இந்தியத் தொழிலாளர்கள் தொடர்பாக மலேசிய அரசு புதிய ஒப்பந்தம் ஒன்றை தயாரித்துக் கொண்டுள்ளது. அது முடியும் தருவாயில் உள்ளது.
மலேசியாவில் பணியாற்றும் இந்தியத் தொழிலாளர்களின் பணி ஒப்பந்தங்கள் குறித்து மலேசிய அரசுடன் இணைந்து இந்திய அரசு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.
வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு இழைக்கப்படும் மனித உரிமை மீறல் விவகாரம் குறித்து நான் அக்கறை கொண்டுள்ளேன். இதுகுறித்து தீவிர கவனம் செலுத்தப்படும். மலேசியாவில் பணியாற்ற வருவோருக்கு நியாயமான, நேர்மையான பணிச் சூழ்நிலையை உருவாக்கித் தர வேண்டியது மலேசிய அரசின் கடமை. அதிலிருந்து நாங்கள் நழுவ மாட்டோம் என்றார் அவர்.
மலேசியாவில் பணியாற்றி வரும் வெளிநாட்டுத் தொழிலாளர்களில் இந்தியர்களின் எண்ணிக்கையே அதிகம். இதில் கட்டுமானத் தொழிலாளர்கள்தான் அதிகம் பேர் உள்ளனர்.
இந்த நிலையில், முறையான விசா இல்லாமல் மலேசியாவில் தங்கியிருந்ததாக கூறி 7 இந்தியர்கள் உள்பட 128 வெளிநாட்டினரை மலேசிய போலீஸார் நேற்று கைது செய்துள்ளனர்.
இவர்களில் மியான்மரைச் சேர்ந்தவர்கள் 65 பேர் ஆவர். அனைவருமே முறையான விசா இல்லாமலும், விசா காலத்தைத் தாண்டி தங்கியிருந்தது உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக மலேசிய அரசு தெரிவித்துள்ளது.