லிங்கத்தின் மீது சூர்ய ஒளி-களக்காடு கோயிலில் உற்சாகம்
களக்காடு: களக்காடு கோயிலில் சூர்ய ஒளி சிவலிங்கத்தின் மீது விழும் வைபவம் நேற்று நடந்தது. ஆண்டுக்கு 2 முறையே இந்த அதிசயம் நிகழும் என்பது குறிப்பிடத்தக்கது.
கடும் மழைக்கு இடையிலும் இந்த வைபவம் நேற்று நடந்ததால் பக்தர்கள் பெரும் பரவசமடைந்தனர்.
களக்காட்டில் கிபி 11ம் நூற்றாண்டில் வீரமார்த்தாண்ட மன்னரால் கட்டப்பட்ட சத்தியவாகீஸ்வரர்-கோமதியம்மாள் கோயில் உள்ளது. பிரசித்த பெற்ற இக்கோயிலில் ஆண்டுதோறும் மார்ச் மற்றும் செப்டம்பர் ஆகிய 2 மாதங்களில் மட்டும், தலா 3 நாட்கள் மூலஸ்தானத்தில் உள்ள சிவலிங்கம் மீது சூர்ய ஒளி நேரடியாக விழுவது வழக்கம்.
இந்தாண்டு மார்ச் 20,21,22 ஆகிய தேதிகளில் சூர்ய ஒளி சிவலிங்கம் மீது விழும் என்று கணிக்கப்பட்டது. அதற்காக கடந்த 20ம் தேதி அதிகாலையில் கோயில் நடை திறக்கப்பட்டு பூஜைகள் செய்யப்பட்டன.
ஆனால் அதிகாலையில் இருந்து மழை பெய்ததால் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இதனால் சூர்ய ஒளி விழுவது தடைப்பட்டது. தொடர்ந்து ஒருவாரமாக மழை பெய்ததால் வழக்கமாக விழும் 22ம் தேதி வரை சூரிய ஒளி விழவில்லை.
இந்நிலையில் சூர்ய ஒளி விழும் அதிசயம் நேற்று காலை 6 மணிக்கு நடந்தது. முதலில் கொடிமர மண்டபத்தில் விழுந்து கொலு மண்டபம், மணி மண்டபம் ஆகியவற்றை கடந்து சிவலிங்கத்தின் மீது விழுந்தது.
அப்போது சிவலிங்கம் பொன் நிறத்தில் தகதகவென காட்சியளித்தார். இதை கண்டு பக்தர்கள் பக்தி பரவசமடைந்தனர். சிறப்பு பூஜைகளுடன் உற்சவம் நடந்தது.












Click it and Unblock the Notifications