'கரன்ட்டுக்கு' லீவு விட்ட ஒரே அரசு திமுகதான் - அதிமுக
சென்னை: இந்தியாவிலேயே மின்சாரத்திற்கு விடுமுறை விட்ட ஒரே அரசு திமுக அரசுதான் என்று சட்டசபையில் அதிமுக உறுப்பினர் வைத்தியலிங்கம் பேசினார்.
சட்டசபையில் இன்று பட்ஜெட் மீதான விவாதத்தில் கலந்து கொண்டு அதிமுக உறுப்பினர் வைத்தியலிங்கம் பேசுகையில்,
தமிழ்நாட்டில் 9,000 சிறு தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன.
நீலகிரி மாவட்ட தேயிலை தொழிற்சாலையை நவீனப்படுத்தப் போவதாக கடந்த பட்ஜெட்டில் அறிவித்தீர்கள். அது என்ன ஆனது.
மழைநீர் சேகரிப்பு திட் டத்தை ஜெயலலிதா தீவிர மாக செயல்படுத்தினார். இதை மக்கள் பாராட்டினார்கள். இன்று அந்த திட்டம் இருக்கிறதா, நடைமுறை படுத்தப்படுகிறதா என்றே தெரியவில்லை.
சென்னை நகரில் மெட்ரோ ரயில் திட்டத்தை அமல்படுத்த கடந்த பட்ஜெட்டில் ரூ. 50 கோடி நிதியை திமுக அரசு ஒதுக்கியது. இந்த பட்ஜெட்டில் ரூ. 90 கோடி ஒதுக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இன்னும் 15 ஆண்டுகள் கழித்தாவது இந்தத் திட்டம் நிறைவேறுமா என்பதை அரசு தெரிவிக்க வேண்டும்.
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு முற்றிலும் குலைந்து போயுள்ளது. மக்கள் நடமாடவே முடியவில்லை. காவல் நிலையத்திலேயே துப்பாக்கிகள் கொள்ளை போகின்றன. நீதிமன்ற வளாகத்திலேயே வக்கீலை வெட்டிக் கொல்கிறார்கள்.
புலி வருது புலி வருது என்பது போல அரசு கேபிள் டி.வி. வருமா வராதா என்றே தெரியவில்லை. விலைவாசி ஏழை மக்களை அழுத்தி கொண்டுள்ளது.
விலைவாசி பல மடங்கு அதிகரித்து விட்டது. இதைக் குறைக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பதை அரசு விளக்க வேண்டும்.
எது எதற்கெல்லாமோ விடுமுறை விடுகிறார்கள். மின்சாரத்திற்கு விடுமுறை விட்ட ஒரே மாநிலம் தமிழ்நாடு தான். அதிமுக ஆட்சியில் மின் தட்டுப்பாடு ஏற்பட்டதே கிடையாது.
மின்சாரத் தடையால் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகின்றனர். மின்சாரத் தட்டுப்பாடு குறித்து தமிழக அரசு வெள்ளை அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் என்றார் வைத்தியலிங்கம்.
அப்போது மின்துறை அமைச்சர் அமைச்சர் ஆற்காடு வீராசாமி குறுக்கிட்டு, உங்கள் ஆட்சியின்போது பயன்பாட்டு தேவை அதிகம் இல்லாமல் இருந்தது. ஆனால் இப்போது பயன்பாட்டு தேவை அதிகமாகியுள்ளது. ஒரு நாளைக்கு 17 கோடி யூனிட் மின்சாரம் தேவைப்படுகிறது.
நிறைய புதிய தொழிற்சாலைகள் செயல்பட்டுக் கொண்டிருக்கி்ன்றன. இரவு நேரங்களில் மாணவ மாணவிகளின் படிப்பு கெடக்கூடாது என்பதற்காக 6 மணியில் இருந்து 10 மணி வரை ஒரு இடத்தில் கூட மின் தடை ஏற்படக்கூடாது என முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
தமிழ்நாட்டில் மின்சார பற்றாக்குறையை சமாளிக்க தொழிற்சாலைகளுக்கு வாரம் ஒரு நாள் விடுமுறை அளிக்கப்படுகிறது. ஞாயிற்றுக்கிழமை அனைத்து தொழிற்சாலைகளுக்கும் விடுமுறை அளித்தால் 1,500 மெகாவாட் மின்சாரம் யாரும் பயன்படுத்தாமல் வீணாகிறது.
எனவே தமிழ்நாட்டை 6 மண்டலங்களாக பிரித்து ஞாயிறுக்கிழமை தவிர்த்து மற்ற நாட்களில் தொழிற்சாலைகள் வாரம் 1 நாள் கட்டாய மின்சார விடுமுறை அளிக்க வேண்டும் என்று தற்காலிகமாக முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
ஏப்ரல் 30ம் தேதிக்கு பிறகு இந்த முறை மாற்றப்படும். முன்புபோல் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை விடலாம் என்ற பழைய முறை மீண்டும் அமலுக்கு வரும்.
மின் வசதி இல்லாத தொலைதூர கிராமங்களில் சூரிய ஒளி மூலம் மின் விளக்கு அமைக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது என்றார்.












Click it and Unblock the Notifications