தமிழக காங். தலைவரை மாற்ற சோனியா முடிவு?
சென்னை: தமிழக காங்கிரசுக்கு புதிய தலைவரை நியமிக்க அக் கட்சியின் தலைமை முடிவு செய்துள்ளது.
இப்போதைய தலைவரான கிருஷ்ணசாமியால் கட்சிக்கு எந்தவிதமான உத்வேகமும் கிடைக்கவில்லை. அவருக்கும் வாசன் கோஷ்டிக்கும் ஒத்துப் போகவில்லை.
இதனால் அவரை கட்சி ஓரங்கட்ட ஆரம்பித்துள்ளது. தனது சம்பந்தியான பாமக நிறுவனர் ராமதாஸ் உதவியோடு ராஜ்யசபா எம்பி சீட் பெற அவர் எடுத்த முயற்சிகள் பலிக்கவில்லை.
இதை திமுகவும் வாசன் தரப்பும் இணைந்து கெடுத்துவிட்டதாக கிருஷ்ணசாமியும் பாமகவும் கருதுகின்றனர்.
நாடாளுமன்றத் தேர்தலை சந்திக்க காங்கிரஸ் தயாராகும் நிலையில் செல்வாக்கான ஒருவரை அந்தப் பதவியில் அமர்த்த சோனியா முடிவு செய்துள்ளார்.
தனது பதவி பறிபோவதைத் தடுக்க தமிழக காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமி டெல்லியில் முகாமிட்டு முயற்சிகள் செய்து வருகிறார்.
ஆனாலும் இந்த முயற்சிகள் பலனளிக்காது என்றே தெரிகிறது.
மத்திய அமைச்சர் பதவியோடு இந்தப் பதவியையும் பிடிக்க வாசன் தீவிரமாக முயன்று வருகிறார்.
அதே நேரத்தில் நிதியமைச்சர் ப.சிதம்பரத்தை நியமிக்கலாமா என்ற யோசனையும் உள்ளது. அதே போல சோனியா குடும்பத்துக்கு நெருக்கமாக உள்ள சுதர்சன நாச்சியப்பனின் பெயரும் பரிசீலிக்கப்பட்டு வருகிறது.
ஆனால், இதை வாசன் தரப்பு விரும்பவில்லை. தனக்கு கிடைக்காவிட்டால் தனது ஆதரவாளர்களில் ஒருவரை அதில் அமர்த்த வாசன் தீவிரம் காட்டி வருகிறார்.
அதே போல நாச்சியப்பன் நியமிக்கப்படுவதை சிதம்பரம் தடுப்பார் என்று தெரிகிறது. இருவருமே சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். முக்குலத்தோர் சமூகத்தைச் சேர்ந்த நாச்சியப்பன் சிதம்பரத்துடன் போட்டி அரசியல் செய்து வருபவர் என்பது குறிப்பிடத்தக்கது.
வாசனை நியமித்தால் திமுகவுடனான கூட்டணியை வலுப்படுத்துவார். அவருக்கும் முதல்வர் கருணாநிதிக்கும் நெருக்கமான நட்பு நிலவுகிறது.
இப்படியாக ஒருவரை ஒருவர் வாரி விட தீவிரம் காட்டி வரும் நிலையில் புதிய தலைவரை சோனியா முடிவு செய்துவிட்டதாகக் கூறப்படுகிறது.
இதுபற்றிய அறிவிப்பு மிக விரைவில் வெளியாகும் என டெல்லி காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஏப்ரல் முதல் வாரத்தில் சென்னை வரும் சோனியா டெல்லி திரும்பிய பின் அந்த அறிவிப்பை வெளியிடலாம்.












Click it and Unblock the Notifications