நர்ஸ் கடத்தல் நாடகம்?-காதலனுடன் ஓட்டம்??
நெல்லை: பாளையங்கோட்டையில் இன்று காலை மருத்துவமனைக்குள் புகுந்த மர்ம கும்பல் நர்சை கடத்தி சென்றது. காதலனுடன் செல்வதற்காக கடத்தல் நாடகம் நடத்தப்பட்டதா என்று போலீசார் விசாரித்து வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம் நாசரேத்தை சேர்ந்தவர் புஷ்பம். பாளையங்கோட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் நர்சாக பணியாற்றி வருகிறார். புஷ்பத்துக்கும், மணிமுத்தாறு சிறப்பு காவல்படையில் போலீஸ்காரராக பணியாற்றும் தூத்துக்குடியை சேர்ந்த கணேசன் என்பவருக்கும் திருமணம் நிச்சயக்கப்பட்டது.
புஷ்பம் ஏற்கனவே ஒருவரை காதலித்து வந்ததால் திருமணத்துக்கு அவர் சம்மதிக்கவி்ல்லை. தன்னை எப்படியாவது திருமணம் செய்துக் கொள்ளும்படி காதலனிடம் கூறியுள்ளார்.
இந்நிலையில் இன்று காலை புஷ்பம் மருத்துவமனையில் வேலை பார்த்து கொண்டிருந்தார். அப்போது ஆம்னி வேனில் வந்த 4 பேர் கொண்ட கும்பல் புஷ்பத்தை கடத்த முயன்றனர்.
தடுத்த ஊழியர்களை கத்தியை காட்டி மிரட்டிய அவர்களை கீழே தள்ளிவிட்டு புஷ்பத்தை மட்டும் இழுத்து கொண்டு ஆம்னி வேனில் பறந்தனர்.
இதுகுறித்து டாக்டர்கள் மற்றும் ஊழியர்கள் பாளை போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். இன்ஸ்பெக்டர் நாகராஜன் மற்றும் போலீசார் தெய்வசெயல்புரம் அருகே, அந்த ஆம்னி வேனை மடக்கி பிடித்தனர். ஆனால் புஷ்பம் அதில் இல்லை. அதில் இருந்த 2 பேரை பிடித்து விசாரித்ததில் புஷ்பம் உள்பட 3 பேரையும் பாளை விஎம் சத்திரத்தில் இறக்கி விட்டதாக தெரிவித்தனர்.
இதையடுத்து அவர்களை போலீசார் தேடி வருகின்றனர். புஷ்பத்தை அவரது காதலன் தனது நண்பர்கள் உதவியுடன் கடத்தி சென்றிருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். காதலனுடன் செல்ல நர்சும் சேர்ந்து இந்த கடத்தல் நாடகத்தை நடத்தினாரா என்று கோணத்திலும் விசாரணை நடந்து வருகிறது.