பயணிகளை படாய் படுத்தும் பொதிகை எக்ஸ்பிரஸ்
நெல்லை: பொதிகை எக்ஸ்பிரஸ் ரயிலில் கூடுதல் கோச், முன் பதிவில் முன்னுரிமை போன்ற கோரிக்கைகளை தென்மாவட்ட பயணிகள் முன் வைத்துள்ளனர்.
சென்னைக்குப் போவதற்கும், அங்கிருந்து சொந்த ஊர்களுக்கு வருவதற்கும், தென்மாவட்ட மக்கள் போக்குவரத்துக்கு அதிகம் நம்புவது ரயில்களைத்தான்.
நெல்லை, மதுரை வழியாக சென்னை, பெங்களுரு உள்ளிட்ட நகரங்களுக்கு ரயில்கள் இயக்கப்படுகின்றன. பண்டிகை மற்றும் கோடை விடுமுறைக்கும் சென்னையில் இருந்து சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. ஆனால் இந்த ரயில்களில் கூட்டம் குறைந்தபாடில்லை.
தென்மாவட்ட மக்களுக்காக இயக்கப்படும் ரயில்களில் ஒன்றான பொதிகை எக்ஸ்பிரஸ் ரயில் பயணிகளின் கோரிக்கை தெற்கு ரயில்வேக்கு பறந்தவண்ணம் உள்ளன.
கேரள மாநிலம் புனலூர் முதல் தமிழகத்தின் சிவகாசி வரை வசிக்கும் லட்சக்கணக்கான பயணிகள் செங்கோட்டை-சென்னை பொதிகை எக்ஸ்பிரஸ் ரயிலை மட்டுமே நம்பி பல்வேறு பகுதிகளுக்கும் சென்று வருகின்றனர்.
இந்த எக்ஸ்பிரஸ் ரயிலில் இருக்க வேண்டிய 24 கோச்சுகளுக்கு பதிலாக 18 கோச்சுகளே இயக்கப்பட்டு வருகின்றன. அதில் முன்பதிவு 2ம் வகுப்பு 9 பெட்டிகளும், ஏசி கோச் மற்றும் சாதாரண பயணிகள் பெட்டி தலா 4 பெட்டிகளும், ஈஎஸ் ஒரு பெட்டியும் உள்ளன.
இதில் தற்போது தினமும் காத்திருப்போர் பட்டியல் 100க்கும் மேல் இருப்பதால் காத்திருக்கும் பயணிகளை இஎஸ் என்ற எண்ணுள்ள பெட்டியில் மாற்றம் செய்யலாம். ஆனால் மாலை 6.50 வரை மதுரையிலிருந்து அனுப்பப்படும் முன்பதிவு பட்டியலில் இந்த பெட்டி பெயர் மட்டும் இடம் பெறுவதில்லை.
ஆனால் இந்த பெட்டிக்கு அனந்தபுரி, கன்னியாகுமரி, நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு முன்பதிவு செய்து காத்திருப்பவர்களை மாற்றிவிடுவது தொடர் கதையாகி வருகிறது. இதனால் பொதிகை ரயிலில் முன்பதிவு செய்து காத்திருப்போர் பட்டியலில் உள்ளவர்கள் தங்களது பயணசீட்டை ரத்து செய்யும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.
பொதிகை ரயில் முன்பதிவில் மதுரை, திருச்சி பயணிகள் அதிகம் ஆக்கிரமித்து விடுவதாகவும் குற்றம்சாட்டப்படுகிறது.
பொதிகை ரயில் பயணிகளின் பிரச்னை விரைவில் தீர்க்கப்படும் என்று ரயில்வை இணை அமைச்சர் ஆர்.வேலு கூறினார். மேலும் விருதுநகருக்கு தெற்கே வசிக்கும் மக்களுக்கு சில முன்னுரிமைகள் வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்திருந்தார். ஆனால் பல மாதங்களாகியும் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை.
தற்போது கோடை விடுமுறை வர உள்ள நிலையில் தென்னக ரயில்வே பாராபட்சமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.