அதிக பஸ் கட்டணம்: நியாயப்படுத்தும் அமைச்சர் நேரு
சென்னை: தமிழகத்தில் பஸ்களுக்கேற்ற கட்டணங்கள்தான் வசூலிக்கப்படுகிறது என்று சட்டசபையில் போக்குவரத்துத்துறை அமைச்சர் கே.என்.நேரு விளக்கமளித்தார்.
சட்டசபையில் கேள்வி நேரத்தின் போது அமைச்சர் நேரு அளித்த பதில்,
தமிழகத்தில் அரசு பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக சில பத்திரிக்கைகளில் செய்திகள் வெளியாகின்றன.
தற்போது சென்னையில் 3,100 பஸ்கள் இயக்கப்படுகின்றன. சாதாரண கட்டண பஸ்கள் குறைக்கப்படவில்லை. அன்று 2,000 பஸ்கள் சாதாரண கட்டண பஸ்களாக இருந்தன. தற்போது 2,100 பஸ்கள் உள்ளன.
இது தவிர புதிய பஸ்களை புதிய வழித்தடங்களில் விடும்போது அந்த பஸ்களுக்கு தகுந்தபடி கட்டணம் நிர்ணயிக்கப்படுகிறது.
அதே போல அரசு விரைவு பஸ்களில் சூப்பர் டீலக்ஸ்களுக்கு பதிலாக அல்ட்ரா டீலக்ஸ் பஸ்கள் விடப்படுகின்றன. பழைய சூப்பர் டீலக்ஸ் பஸ்களை மீண்டும் விட முடியாத நிலை உள்ளது. எனவே அல்ட்ரா டீலக்ஸ் பஸ்களுக்கு அதற்குரிய கட்டணங்கள் வசூலிக்கப்படுகின்றன.
முன்பு 11,500 விரைவு பஸ்கள் இருந்தன. விரைவு பஸ் நிறுவனத்தையே மூட கடந்த ஆட்சியில் முயற்சி எடுக்கப்பட்டது. ஆனால் முதல்வர் கருணாநிதி ஆட்சிக்கு வந்த பிறகு அரசே புதிய பஸ்களை வாங்கி தருவதால் மீண்டும் விரைவு பேருந்து கழகம் சிறப்பாக செயல்படுகிறது.
தற்போது 19,500 பஸ்கள் விரைவு பேருந்து கழகத்தில் உள்ளன.
குளுகுளு பஸ்கள்:
தமிழ்நாட்டில் புதிதாக 100 குளிர் சாதன பஸ்கள் வாங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது தவிர ஆண்டுக்கு 300 புதிய பஸ்கள் வாங்கவும் நடவடிக்கை எடுக்கப்படும். இதைக் கொண்டு பழைய பஸ்களை மாற்றி புதிய பஸ்கள் இயக்கப்படும்.
புதிய கோட்டங்கள்:
தமிழ்நாட்டில் முன்பு 20க்கும் மேற்பட்ட போக்குவரத்து கழகங்கள் இருந்தன. செலவை குறைப்பதற்காக அவை 7 கோட்டங்களாக மாற்றி அமைக்கப்பட்டன.
பஸ்கள் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு 2,000 பஸ்களுக்கு ஒரு கோட்டம் என்ற வகையில் பிரிக்கலாமா என்ற ஆலோசனை நடந்து வருகிறது.
மதுரை கோட்டம் தான் மிகப் பெரிய கோட்டமாக இருக்கிறது. அங்கு 3,900 பஸ்கள் உள்ளன. எனவே அந்த கோட்டத்தை 2 ஆக பிரிக்கலாமா, பிரித்தால் ஏற்படும் செலவை ஈடுகட்ட முடியுமா என்பது குறித்து அரசு ஆலோசித்து வருகிறது என்றார் நேரு.