ஏப்ரல் 5ல் காரைக்குடி வருகிறார் சோனியா
சென்னை: ஏப்ரல் 5ம் தேதி காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தமிழகம் வருகிறார். காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் நிதியமைச்சர் ப.சிதம்பரம் குடும்பத்தார் கட்டியுள்ள ஆடிட்டோரியத்தை அவர் திறந்து வைக்கிறார்.
காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக வளாகத்தில் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் குடும்பத்தினர் ரூ. 3 கோடி செலவில் பிரம்மாண்ட ஆடிட்டோரியம் கட்டியுள்ளனர்.
சிதம்பரத்தின் தந்தை பழனியப்ப செட்டியார் பெயர் சூட்டப்பட்டுள்ள இந்த ஆடிட்டோரியத்தை வரும் 5ம் தேதி காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி திறந்து வைக்கவுள்ளார்.
மேலும் அதே தினத்தில் காரைக்குடியில் தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள விவசாயிகள் மற்றும் மகளிர் பேரணிகளையும் பார்வையிடும் சோனியா, அங்கு பொதுக் கூட்டத்திலும் உரையாற்றுகிறார்.
டெல்லியிலிருந்து விமானம் மூலம் திருச்சி வரும் சோனியா அங்கிருந்து ஹெலிகாப்டரில் காரைக்குடி செல்வார் எனத் தெரிகிறது.
இந் நிலையில் தமிழக காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில்,
சோனியா காந்தியின் தமிழக வருகையை ஒரு வரலாற்று நிகழ்ச்சியாக சிறப்படையச் செய்வது நமது மாபெரும் கடமையாகும். இன்னும் இருப்பது சில நாட்களே.
அதை எண்ணி தமிழகமெங்குமுள்ள அனைத்து மாவட்ட காங்கிரஸ் பேரியக்க விவசாயத் தோழர்கள், மகளிர் மற்றும் அனைத்து பிரிவு காங்கிரஸ் தோழர்களை பெரும் திரளாக பங்கேற்க அழைத்து வர வேண்டுமென்று பெரிதும் வேண்டுகிறேன்.
இது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் சத்தியமூர்த்தி பவனில் 30ம் தேதி நடைபெறவுள்ளது. கூட்டத்தில் காங்கிரஸ் எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் மாவட்டத் தலைவர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டுமென அன்புடன் கேட்டுக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.
தனது தமிழக வருகையின்போது முதல்வர் கருணாநிதியையும் சந்திக்க திட்டமிட்டுள்ள சோனிய அரசியல் விவகாரங்கள் குறித்து முக்கிய ஆலோசனைகள் நடத்தவுள்ளார்.












Click it and Unblock the Notifications