அத்வானி சொல்வது உண்மையில்லை-பெர்னான்டஸ்

மை கன்ட்ரி, மை லைப் என்ற பெயரில் அத்வானி புதிய புத்தகம் ஒன்றை எழுதியுள்ளார். இந்தப் புத்தகத்தில் அத்வானி பல்வேறு முக்கிய சம்பவங்களை வர்ணித்துள்ளார். இது பல்வேறு சர்ச்சைசகளை எழுப்பி வருகிறது. பாஜகவுக்குள்ளும் இது புயலைக் கிளப்பி வருகிறது.
இந்த நிலையில் காந்தஹார் விமானக் கடத்தல் தொடர்பாக அத்வானி கூறியுள்ள கருத்துக்களுக்கு அப்போதைய வாஜ்பாய் அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த முன்னாள் அமைச்சர்கள் மறுப்பு தெரிவித்துள்ளனர்.
காந்தஹார் விமானக் கடத்தல் தொடர்பாக அத்வானி கூறியுள்ள கருத்து இதுதான்: ஐ.சி.814 விமானத்தில் கடத்தப்பட்ட 189 பயணிகளை மீட்பதற்கு, இந்திய சிறையில் உள்ள பயங்கரவாதிகளை ஒப்படைக்க எடுக்கப்பட்ட முடிவின் படி, பயங்கரவாதிகளுடன் ஜஸ்வந்த் சிங் செல்வார் என்பது எனக்கு தெரிவிக்கப்படவில்லை. பாதுகாப்புக்கான அமைச்சரவை கூட்டத்தில் ஜஸ்வந்த் சிங்கை அனுப்புவது குறித்து முடிவு எடுக்கப்படவில்லை என்று கூறியுள்ளார் அத்வானி.
பெர்னாண்டஸ் மறுப்பு:
இதை தேசிய ஜனநாயகக் கூட்டணியின் ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் பாதுகாப்புத் துறை அமைச்சருமான ஜார்ஜ் பெர்னாண்டஸ் மறுத்துள்ளார். இதுகுறித்து பெர்னாண்டஸ் கூறுகையில்,
பயங்கரவாதிகளை விடுவிப்பது, காந்தகாருக்கு தனி விமானம் அனுப்புவது, அதில் ஜஸ்வந்த் சிங் செல்வது ஆகிய அனைத்தும், அனைத்து அமைச்சர்களும் இடம் பெற்ற கூட்டத்தில் தான் முடிவு செய்யப்பட்டது. அந்த கூட்டத்தில் அத்வானியும் இடம் பெற்றிருந்தார்.
பயங்கரவாதிகளை ஏற்றிச் சென்ற விமானம், முதலில் அமிர்தசரஸ் சென்று, அதன் பின், காந்தகாருக்கு சென்றது. இந்த முடிவு, ஒட்டு மொத்த அமைச்சரவையின் ஒருமித்த முடிவு தான் என்று அவர் கூறியுள்ளார்.
பி.சி.கந்தூரியும் மறுப்பு:
இதே போல, வாஜ்பாய் அமைச்சரவையில் சாலை போக்குவரத்து மற்றும்
கப்பல் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தவரும், தற்போதைய உத்தரகண்ட் முதல்வருமான பி.சி.கந்தூரியும், அத்வானியின் கருத்தை மறுத்துள்ளார்.
அவர் கூறுகையில், பயங்கரவாதிகளை விடுவிக்கும் ஆலோசனைக்கு தான் சம்மதிக்காததாக அத்வானி கூறியிருப்பது தவறு. அப்போதைய சிக்கலான சூழ்நிலையில், பல்வேறு சாதக, பாதகங்களை முழுமையாக ஆராய்ந்து தான், அமைச்சரவை கூட்டத்தில், பயங்கரவாதிகளை விடுவிக்க முடிவு எடுக்கப்பட்டது. இதில், எவை தவறு என்றும், எவை சரியானவை என்றும் பாகுபடுத்தி பார்க்க முடியாது என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications