'எஸ்' ஆன 50 பாகிஸ்தான் போலீஸார் டிஸ்மிஸ்
இஸ்லாமாபாத்: தீவிரவாதிகளுடன் சண்டை போடாமல், சொல்லாமல் கொள்ளாமல் எஸ்கேப் ஆன 50 பாகிஸ்தான் போலீஸார் பணியிலிருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்டுள்ளனர்.
பாகிஸ்தானின் வட மேற்கு எல்லைப்புற மாகாணம் தீவிரவாதிகளின் சொர்க்கபுரியாக உள்ளது. இம்மாகாணத்தின் பல்வேறு பகுதிகளில் தீவிரவாதிகளின் ராஜ்ஜியம்தான் நடக்கிறது.
குறிப்பாக ஸ்வாட் பள்ளத்தாக்கில் தலிபான்கள் தான் ஆட்சி நடத்தி வருகின்றனர். இந்தப் பகுதி கிட்டத்தட்ட பாகிஸ்தான் அரசின் கட்டுப்பாட்டில் இல்லை. இங்கு தீவிரவாதிகளை ஒடுக்க ராணுவம் கடுமையாக போராடி வருகிறது.
இந்த நிலையில் கடந்த ஆண்டு இப்பகுதியில் மெளலானா பசுல்லா தலைமையிலான தலிபான் படையினருக்கு எதிராக பெரும் தாக்குதலை ராணுவம் மேற்கொண்டது. அப்போது உள்ளூர் போலீஸாரும் அதில் ஈடுபடுத்தப்பட்டனர்.
ஆனால் தலிபான் தீவிரவாதிகளால் தங்களுக்கு ஆபத்து வரும் என்று பயந்த நூற்றுக்கணக்கான போலீஸ்காரர்கள் சொல்லாமல் கொள்ளாமல் தப்பி தலைமறைவாகி விட்டனர். இதுவரை அவர்கள் யாரும் பணிக்குத் திரும்பவில்லை.
தற்போது அவர்கள் மீது பாகிஸ்தான் காவல்துறை நடவடிக்கை எடுக்க ஆரம்பித்துள்ளது. மிங்கோரா நகரில் உள்ள பல்வேறு காவல் நிலையங்களைச் சேர்ந்த 200 போலீஸார் இதுவரை பணிக்கு வரவில்ைல.
இதுதவிர மேலும் 200 பேர் 'பிரெஞ்ச் லீவில்' (அதாவது முறைப்படியான விடுமுறைக் கடிதம் தராமல் செல்பவர்களுக்கு அப்படி ஒரு செல்லப் பெயர்) உள்ளனர்.
இப்படிப்பட்ட போலீஸ்காரர்களில் 50 பேர் தற்போது டிஸ்மிஸ் செய்யப்பட்டுள்ளனர்.
ஆனால் தங்களுக்கு அடிமாட்டு லெவலுக்கு சம்பளம் தரப்படுவதால்தான் பணிக்கு வர விருப்பமில்லாமல் நீண்ட விடுமுறையில் போய் விட்டதாக டிஸ்மிஸ் ஆன ஒரு போலீஸ்காரர் கூறுகிறார். உயிரைப் பணயம் வைத்து நாங்கள் சண்டை போட வேண்டியுள்ளது. ஆனால் உருப்படியான சம்பளம் தர அரசு விரும்புவதில்லை. அப்படி இருக்கையில் எப்படி பணியில் ஈடுபட முடியும் என்று அவர்கள் கேட்கிறார்கள்.
போலீஸ்காரர்களைச் சொல்லியும் குற்றம் இல்லை. காரணம், தீவிரவாதிகளின் முதல் குறியே போலீஸ்காரர்கள்தான். அவர்களைத்தான் தீவிரவாதிகள் விரட்டி விரட்டி சுட்டுக் கொல்கின்றனர். இதனால்தான் பயந்து போய் பல போலீஸ்காரர்கள் சொல்லாமல் கொள்ளாமல் ஓடுகின்றனராம்.
ஏராளமான போலீஸாரை தலைகளைத் துண்டித்து தீவிரவாதிகள் கொன்றுள்ளனராம். ஆனால் அவர்களது குடும்பத்தினருக்கு பாகிஸ்தான் அரசு இதுவரை உருப்படியாக எந்த உதவியும் செய்யவில்லை என்றும் போலீஸ்காரர்கள் தரப்பில் புலம்புகின்றனர்.