வரி ஏய்ப்பு: முருகன் இட்லிகடைகளில் அதிரடி ரெய்டு
சென்னை தி.நகரை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும் முருகன் இட்லி கடைக்கு தமிழ்நாடு முழுவதும் 15 கிளைகள் உள்ளன. இந்த கடைகளில் இட்லிதான் பிரதாமான மெனுவே. இவற்றில் கோடிக்கணக்கான ரூபாய் வியாபாரம் நடப்பதாக கூறப்படுகிறது.
ஆனால் விற்பனை விவரங்களை முறைப்படி கணக்கு காட்டாமல் வரி ஏய்ப்பு செய்வதாக வருமான வரித்துறையினருக்கு சந்தேகம் எழுந்தது. கோடிக்கணக்கான ரூபாய் வருமானத்ைத கணக்கிலேயே காட்டாமல் முருகன் இட்லிக் கடை நிர்வாகம் மறைத்து விட்டதாக கூறப்படுகிறது.
இதையடுத்து முருகன் இட்லிக் கடைக்கு வருமான வரித்துறை குறி வைத்தது. அதன் விற்பனை நிறுவனங்கள் அனைத்தும் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வந்தன.
இந்த நிலையில் நேற்று இரவு மூன்று நகரங்களிலும் உள்ள கடைகளை வருமான வரித்துறையின் 8 குழுக்கள் முற்றுகையிட்டன. 60க்கும் மேற்பட்ட அதிகாரிகள் ஒரே நேரத்தில் சோதனையில் ஈடுபட்டனர்.
சென்னையில் உள்ள 8 கிளைகள், மதுரையில் 4 மற்றும் திருச்சியில் உள்ள 3 கிளைகளில் இந்த சோதனை நடந்தது.
மேலும் முருகன் இட்லிக் கடை உரிமையாளர் மனோகரன் மற்றும் பிற நிர்வாகிகளின் வீடுகளிலும் சோதனை நடத்தப்பட்டது.
இந்த சோதனையின்போது வரி ஏய்ப்பு தொடர்பான பல்வேறு முக்கிய ஆதாரங்கள் சிக்கியதாக தெரிகிறது.