பிரதமர் அழைப்பு - கர்நாடக ஆளுநர் டெல்லி விரைகிறார்
பெங்களூர்:கர்நாடக கலவரம் தீவிரமடைந்து வருவதைத் தொடர்ந்து அம்மாநில ஆளுநர் ராமேஷ்வர் தாக்கூரை உடனடியாக டெல்லி வருமாறு பிரதமர் மன்மோகன் சிங் அழைத்துள்ளார். இதையடுத்து தாக்கூர் டெல்லி விரைகிறார்.
ஓகனேக்கர் கர்நாடகத்திற்குச் சொந்தம், அங்கு குடிநீர்த் திட்டத்தை நிறைவேற்றக் கூடாது என்று கூறி கன்னட அமைப்புகள் வன்முறையில் குதித்துள்ளன.
தமிழ்ப் படங்கள் திரையிடப்பட்டுள்ள தியேட்டர்களைத் தாக்கி வருகின்றனர். தமிழ் டிவி சானல்களை இருட்டடிப்பு செய்துள்ளனர். தங்களது போராட்டத்தைத் தீவிரப்படுத்தப் போவதாகவும் எச்சரித்துள்ளனர். 10ம் தேதி பந்த் அழைப்பும் விடுக்கப்பட்டுள்ளது.
இதனால் பெரும் கலவரம் மூளலாம் என்ற அச்சம் கர்நாடகத் தமிழர்களிடையே, குறிப்பாக பெங்களூர், மைசூர் தமிழர்களிடையே நிலவுகிறது.
இந்த நிலையில் நேற்று தமிழக சட்டசபையில் பெங்களூர் வன்முறையைக் கண்டித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இத்தீர்மானம் மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்படும் எனவும், மத்திய அரசு தேசிய ஒருமைப்பாடு, இறையாண்மை ஆகியவற்றைக் காக்க முன்வர வேண்டும் எனவும் தீர்மானத்தில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இந்த விவகாரத்தில் பிரதமர் தலையிட்டுள்ளார். கர்நாடக வன்முறை குறித்து கேட்டறிய, மாநில ஆளுநர் ராமேஷ்வர் தாக்கூரை டெல்லிக்கு வருமாறு அவர் அழைத்துள்ளார்.
இதையடுத்து இன்று காலை தாகூர் டெல்லி விரைகிறார். தமிழர்களுக்கு எதிரான வன்முறையைத் தடுக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது குறித்து பிரதமரிடம் தாக்கூர் விவரிக்கவுள்ளார்.
தற்போதைய வன்முறையைத் தடுக்க போலீஸார் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் கும்பலாக நின்று வேடிக்கை பார்ப்பதாக தமிழர்களும், தமிழ்ச் சங்கமும் குற்றம் சாட்டி வருவது குறிப்பிடத்தக்கது. இன்று எல்லையில் கன்னடர்கள் ஆர்ப்பாட்டம்
இதற்கிடையே தமிழக, கர்நாடக எல்லையில் இன்று பெரிய அளவில் ஆர்ப்பாட்டம் நடத்தப் போவதாக கன்னட ரக்சன வேதிகே அறிவித்துள்ளது. இதனால் எல்லைப் பகுதியில் பெரும் பதட்டம் நிலவுகிறது. இரு மாநில போலீஸாரும் பெருமளவில் குவிக்கப்பட்டுள்ளனர்.
--