பெங்களூர்-தமிழர் பகுதிகளுக்கு கூடுதல் பாதுகாப்பு
பெங்களூர்: கன்னட இயக்கத்தினர் மிரட்டல் காரணமாக பெங்களூரில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் அல்சூர், சிவாஜி நகர், சாந்திநகர், ராஜாஜி நகர் உள்ளிட்ட பகுதிகளில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
முன்னதாக தமிழர்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்கக் கோரி பெங்களூர் தமிழ்ச் சங்கத் தலைவர் சண்முகசுந்தரம் தலைமையிலான நிர்வாகிகள் ஆளுநர் ராமேஸ்வர் தாக்கூரை சந்தித்து மனு அளித்தனர். அத் போல டிஜிபி சீனிவாசனையும் (இவர் தமிழர் என்பது குறிப்பிடத்தக்கது) சந்தித்து மனு தந்தனர்.
இதையடுத்து தமிழர் பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. இது குறித்து பெங்களூர் போலீஸ் கமிஷ்னர் நீலம் அச்சுதராவ் கூறுகையில், சட்டம் ஒழுங்கை யார் சீர்குலைத்தாலும் கடும் நடவடிக்கை பாயும். அமைதியான போராட்டங்கள் நடத்த அனுமதி உண்டு. ஆனால், சட்டத்தை கையில் எடுத்துக் கொண்டு அடாவடியில் யார் ஈடுபட்டாலும் நடவடிக்கை எடுப்போம்.
செல்வி வீட்டுக்கு பாதுகாப்பு:
தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகள், தமிழ் பத்திரிகை அலுவலகங்கள், ஜே.பி. நகரில் உள்ள தமிழக முதல்வர் கருணாநிதி மகள் செல்வியின் வீடு, அலுவலகம், சினிமா தியேட்டர்கள் ஆகியவற்றுக்கு முழு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது என்றார்.
ஓகேனக்கல் கன்னடர்களுக்கு சொந்தம்-காங்:
ஓகேனக்கல் என்றுமே கன்னடர்களுக்கு சொந்தமானது என கர்நாடக முன்னாள் காங்ரகிரஸ் முதல்வர் தரம்சிங் கூறியுள்ளார்.
அவர் கூறுகையில், (இவரது பூர்வீகம் கர்நாடகம் அல்ல, வட மாநிலம் என்பது குறிப்பிடத்தக்கது)
ஓகேனக்கல் என்றுமே கன்னடர்களுக்கு சொந்தமானது. தமிழக முதல்வர் கருணாநிதி உணர்வுகளை தூண்டும் வகையில் பேசியிருப்பது சரியல்ல. கன்னடர்களுக்கு நடக்கும் அநீதியை பொறுத்து கொள்ள முடியாது. தமிழக முதல்வர் கருணாநிதியின் பேச்சை பாஜக தனது சந்தர்ப்பவாத அரசியலுக்கு சாதகமாக்கி கொள்ள பார்க்கிறது என்றார்.
சோனியாவுடன் கிருஷ்ணா சந்திப்பு:
இந்த விவகாரத்தில் இதுவரை மிக நிதானமாக பேசி வரும் ஒரே தலைவர் காங்கிரஸ் முன்னாள் முதல்வர் கிருஷ்ணா தான். இது இரு மாநில பிரச்சனை, இதை பேசித் தீர்க்கலாம் என்று மட்டும் கூறியுள்ள இவர் நேற்று டெல்லி விரைந்தார்.
ஓகேனக்கல் விவகாரம் வரும் சட்டமன்றத் தேர்தலில் அரசியல்ரீதியில் என்ன விதமான பாதிப்பை ஏற்படுத்தும் என்பது குறித்து சோனியாவுடன் அவர் விவாதித்தார்.












Click it and Unblock the Notifications