மாயாவதி குறித்து அவதூறாக பேசிய திகாயத் கைது
பாரதிய கிசான் யூனியன் தலைவரான திகாயத், வட மாநிலங்களில் விவசாயிகள் மத்தியில் மிகவும் பிரபலமான தலைவர். 1980களில் டெல்லியில் இவர் நடத்திய போராட்டத்தால் தலைநகரமே ஸ்தம்பித்தது. லட்சக்கணக்கான விவசாயிகளை டெல்லியில் வாரக்கணக்கில் குவிய வைத்து மாபெரும் வெற்றிப் போராட்டத்தை நடத்தியவர்.
ஜாட் சமூகத்தைச் சேர்ந்த இவர் சமீபத்தில் நடந்த போராட்டம் ஒன்றில் பேசியபோது முதல்வர் மாயாவதியை மிகக் கடுமையாக விமர்சித்தார். ஜாதிரீதியாகவும் இழிவாகப் பேசினார்.
இதற்கு நாடு முழுவதுமே கடும் எதிர்ப்பு கிளம்பியுள்து. இதையடுத்து அவரைக் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இந்நிலையில் அவரை கைது செய்ய சுமார் 10,000 போலீசார் அவர் வசிக்கும் உத்தரப் பிரதேசத்தின் சிசாலி கிராமத்தில் குவிந்தனர். இவர்களைத் தடுக்க 4,000 விவசாயிகளும் குவிந்ததால் பெரும் பதற்றம் நிலவியது.
இதையடுத்து பதற்றத்தை குறைக்கும் முயற்சியாக அவரை சரணடைய வைக்கும் நடவடிக்கைகளில் சிசாலியில் கிராம பஞ்சாயத்து கூடியது. அதில், சரணடைய திகாயத் ஒப்புக் கொண்டார். இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.
முன்னதாக போலீசார் கலைந்து செல்ல வேண்டும், நான் நீதிமன்றத்தில் தான் சரணடைவேன் என்று திகாயத் கோரினார். அதை போலீசார் ஏற்கவில்லை.
இதற்கிடையே, மேலும் முதல்வர் மாயாவதி குறித்து தான் பேசிய வார்த்தைகளை வாபஸ் பெறவும் தயாராக இருப்பதாக திகாயத் தெரிவிததுள்ளார்.
மாயாவதி என் மகள் போன்றவர். நான் பேசியது அவரை புண்படுத்தும் நோக்கத்தில் அல்ல, அவர் ஏற்றுக் கொண்டால் நான் பேசியதை வாபஸ் பெறுகிறேன் என்றார்.
திகாயத்தின் இரு மகன்களையும் போலீசார் ஏற்கனவே கைது செய்துவிட்டது குறிப்பிடத்தக்கது.